Publish Date: Mon, 15 Oct 2007 (17:34 IST)
Updated Date: Mon, 15 Oct 2007 (17:34 IST)
வருகிற 18-ஆம் தேதி நாடுதிரும்பத்திட்டமிட்டுள்ள முன்னாள் பிரதமர் பெனாசீர் புட்டோ, அவர் மீதுள்ள வழக்குகளையும், சட்டப்படியான நடவடிக்கைகளையும் சந்திக்க வேண்டும் என்று பாகிஸ்தான் பிரதமர் சவ்கத் அஜீஸ் கூறியுள்ளார்.
பாகிஸ்தானில் இருமுறை பிரதமாராக இருந்த பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவர் தலைவர் பெனாசீர் புட்டோ மீது ஊழல் குற்றச்சாற்றுகள் கூறப்பட்டன.
இதையடுத்து கைது நடவடிக்கைகளைத் தவிர்ப்பதற்காக பெனாசீர், கடந்த 1998-ஆம் ஆண்டு வெளிநாட்டிற்குத் தப்பிச் சென்றார்.
கடந்த 9 ஆண்டுகளாக துபாய், லண்டன் போன்ற இடங்களில் வசித்துவரும் பெனாசீர், மீண்டும் பாகிஸ்தான் பிரதமராகும் ஆசையில் வருகிற 18-ஆம் தேதி நாடு திரும்பத்திட்டமிட்டுள்ளார்.
இந்நிலையில், ''பெனாசீர் சுதந்திரமாக நாடு திரும்பலாம். ஆனால் பாகிஸ்தானின் மற்ற குடிமகன்களுக்கு உள்ளதைப் போல எல்லா சட்டங்களும் பெனாசீருக்கும் பொருந்தும்'' என்று தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த நேர்காணலில் பாகிஸ்தான் பிரதமர் சவ்கதி அஜிஸ் கூறியுள்ளார்.
''பெனாசீர் மீதுள்ள ஊழல் வழக்குகளை நீக்குவதற்கு பாகிஸ்தான் மக்கள் கடுமையான எதிர்ப்புகளைத் தெரிவிப்பார்கள்'' என்றும் அவர் தெரிவித்துள்ளார்.