Publish Date: Fri, 05 Oct 2007 (16:47 IST)
Updated Date: Fri, 05 Oct 2007 (16:47 IST)
பருவநிலை மாற்றத்தால் வழக்கத்தைவிட இந்த ஆண்டு புயல், வெள்ளம் போன்ற இயற்கைச் சீற்றங்கள் அதிகமான எண்ணிக்கையில் உலக நாடுகளைத் தாக்கி பேரழிவை ஏற்படுத்தியுள்ளது என்று ஐக்கிய நாடுகள் அவை எச்சரித்துள்ளது.
உலகம் வெப்பமயமாதலால் மனித சமூகத்திற்கு மிகக்கடுமையான பாதிப்புகள் ஏற்படும் என்று கூறப்பட்டது இப்போது உண்மையாகி வருகிறது என்று ஐ.நா மனிதநேய விவகாரங்கள் துறையின் துணைச் செயலர் சர் ஜான் ஹோல்ம்ஸ் கூறியுள்ளார்.
பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளை நாம் தினமும் பார்க்கிறோம். ஒவ்வொரு ஆண்டும் புதிய வடிவங்களில் அவை நம்மைச் சந்திக்கின்றன. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பருவநிலை காரணமாக சர்வதேச அளவில் ஏற்பட்ட பேரழிவுகளில் பாதிதான் ஐ.நாவின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டு உதவி கோரப்பட்டன.
ஆனால் இந்த ஆண்டு எல்லாப் பேரழிவுகளும் ஐ.நாவின் கவனத்திற்கு வந்துள்ளன. பருவநிலை தொடர்பான 13 பாதிப்புகளில் அவசரநிலை உதவி கோரப்பட்டுள்ளன.
தென் ஆப்பிரிக்க நாடுகள்தான் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றன. தெற்காசிய நாடுகளும், வடகொரியாவும் அதற்கடுத்த இடத்தில் உள்ளன.
ஜூலை மாதத்தில் ஆசியப் பகுதியில் பாகிஸ்தானைவிட இந்தியா வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டது. ஆனால் இருநாடுகளும் ஐ.நாவின் உதவியைக் கோரவில்லை. இயற்கைச் சீற்றங்களால் தெற்காசியாவில் 66 கோடி மக்கள் வீடுகளை இழந்துள்ளனர்.
உலகிலேயே மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் மறக்க முடியாதவை தென்னாப்பிரிக்க நாடுகளாகும். அங்கு வசிக்கும் பல கோடி மக்களின் தினசரி வாழ்க்கையே கேள்விக்குறியாகி உள்ளது.
உலகம் வெப்பமயமாதலால் வெள்ளங்கள் உருவாகும் என்பது சாதாரணம். ஆனால் அதைவிட இருமடங்கு பாதிப்புகள் பருவநிலை மாற்றத்தால் உருவாகும். புயல்கள் அதிகரிப்பு, காற்றில் மாசுக்கள் அதிகரிப்பு ஆகியவை இதில் அடங்கும் என்று ஹோல்ம்ஸ் தெரிவித்தார்.