Publish Date: Wed, 03 Oct 2007 (13:36 IST)
Updated Date: Wed, 03 Oct 2007 (13:36 IST)
சிறிலங்காவுக்கு அடுத்த வாரம் செல்லவுள்ள ஐக்கிய நாடுகள் அவையின் மனித உரிமைகளுக்கான ஆணையர் லூயிஸ் ஆர்பர், தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள வன்னிக்குச் செல்வதற்கு விடுத்த வேண்டுகோளை சிறிலங்கா அரசு நிராகரித்துள்ளது.
விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளின் நிலமைகளை அறிவதற்காக விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட அரசியல்துறையைச் சேர்ந்தவர்களை சந்திக்கும் பொருட்டு லூயிஸ் ஆர்பர் இந்த வேண்டுகோளை விடுத்திருந்தார்.
எனினும் லூயிஸ் ஆர்பரின் வேண்டுகோளை சிறிலங்கா அரசு நிராகரித்துள்ளதுடன் அதற்கு பாதுகாப்பு காரணங்களை காட்டியுள்ளது.
அடுத்தவாரம் புதன்கிழமை (10.10.07) சிறிலங்காவுக்குச் செல்லவுள்ள லூயிஸ் ஆர்பர், அதிபர் மகிந்த ராஜபக்சா, அரசியல் கட்சித் தலைவர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்களின் பிரதிநிதிகள் ஆகியோரைச் சந்திக்கவுள்ளார். பயணத்தின் முடிவில் செய்தியாளர்களையும் சந்திப்பார்.