Publish Date: Fri, 28 Sep 2007 (17:49 IST)
Updated Date: Fri, 28 Sep 2007 (17:48 IST)
பாகிஸ்தான் அதிபர் பர்வேஷ் முஷாரஃப் இராணுவத் தளபதி பதவியிலிருந்துகொண்டு தேர்தலில் போட்டியிட எந்தத் தடையும் இல்லை என்று பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
முஷாரஃப் இரண்டு பதவிகள் வகிப்பதற்கு எதிராகத் தொடரப்பட்ட அனைத்து வழக்குகளையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.
பாகிஸ்தானில் அதிபர் தேர்தல் வருகிற அக்டோபர் 6ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அந்நாட்டு அதிபர் பர்வேஷ் முஷாரஃப் மீண்டும் தேர்தலில் போட்டியிடுவதற்கு எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தன. இராணுவத் தளபதி பொறுப்பையும் வகிக்கும் அதிபர் முஷாரஃப், இரண்டு பதவிகளை வகிக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.
மேலும், எதிர்ப்பை மீறி முஷாரஃப் தேர்தலில் போட்டியிட்டால் மொத்தமாகப் பதவி விலகுவோம் என்று நாடாளுமன்ற எதிர்க்கட்சிஉறுப்பினர்கள் மிரட்டல் விடுத்திருந்தனர்.
இதற்கிடையில், அதிபர் தேர்தலில் முஷாரஃப் வெற்றிபெற்றால், அவர் தனது இராணுவத் தளபதி பொறுப்பிலிருந்து விலகுவார் என்று அவரின் வழக்கறிஞர் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் முஷாரஃப்பிற்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்குகளில் தீர்ப்பு வழங்கப்பட்டது.
நீதிபதி இராணா பகவன்தாஸ் தலைமையிலான ஒன்பது நீதிபதிகள் கொண்ட அமர்வு, அதிபர் பர்வேஷ் முஷாரஃப் இராணுவத் தளபதி பதவியிலிருந்துகொண்டே தேர்தலில் போட்டியிட அனுமதிப்பதாகக் கூறியது. எதிரான வழக்குகள் அனைத்தையும் தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.