Publish Date: Fri, 03 Aug 2007 (12:32 IST)
Updated Date: Fri, 03 Aug 2007 (12:30 IST)
கிளாஸ்கோ விமான நிலையத்தை வெடி குண்டுகள் நிரப்பிய ஜீப்பில் வந்து மோதி தாக்குதல் நடத்தியதில் பலத்த தீக்காயம் அடைந்த கபீல் அகமது சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கடந்த ஜூன் மாதம் 30 ஆம் தேதி கிளாஸ்கோ விமான நிலையத்தில் எரியும் ஜீப்பை 2 பேர் ஓட்டி வந்து தாக்குதல் நடத்த முயன்றனர். ஆனால் காவல் துறையினர் அவர்களின் தாக்குதலை முறியடித்தனர்.
இந்த தாக்குதலில் பயங்கர தீக்காயங்களுடன் பிடிபட்ட கபீல் அகமது இந்தியாவை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. இதையடுத்து, இங்கிலாந்து காவல் துறையினரின் தீவிர கண்காணிப்பின் கீழ் கபீல் அகமதுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
கடந்த ஒரு மாதகாலமாக சிகிச்சை பெற்று வந்த கபீல் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக இங்கிலாந்து காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கபீல் அகமதுவுடன் கிளாஸ்கோ விமான நிலைய தாக்குதலில் ஈடுபட்ட மருத்துவர் பிலால் அப்துல்லா, அவரது சகோதரர் சபீல் அகமது ஆகியோர் தற்போது காவல்துறை கட்டுப்பாட்டில் உள்ளார்.