Publish Date: Fri, 20 Jul 2007 (10:31 IST)
Updated Date: Mon, 24 Feb 2014 (19:02 IST)
பாகிஸ்தானில் நேற்று மூன்று வெவ்வேறு இடங்களில் நடந்த தற்கொலைப் படை தாக்குதல்களில் 2 குழந்தைகள், 8 காவலர்கள் உள்பட 57 பேர் பலியாகியுள்ளனர்.
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபத்தில் உள்ள லால் மசூதிக்குள் நுழைந்து ராணுவம் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து அங்கு தற்கொலைப் படை தாக்குதல் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
பாகிஸ்தானில் தென்மேற்கு பகுதியில் சீனப் பொறியாளர்கள் சென்ற வாகனம் ஒன்றை குறிவைத்து தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில் 8 காவலர்கள் உள்பட 30 பேர் பலியாகி இருப்பதாக காவல் துறை அதிகாரி அப்துல்லாக் அப்ரிடி தெரிவித்தார்.
அதேபோல் பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியில் காவலர் பயிற்சி மையத்தின் நுழைவாயிலில் நிறுத்தப்பட்டிருந்த வெடி குண்டுகள் நிரப்பபட்ட வாகனம் வெடித்ததில் 8 அப்பாவி பொது மக்கள் உடல் சிதறி பலியாகினர்.
பாகிஸ்தானில் வடமேற்கு பகுதியில் ராணுவ முகாமில் உள்ள மசூதியில் நேற்று மாலை நடந்த தற்கொலை படை தாக்குதலில் 2 குழந்தைகள் உள்பட 19 பேர் பலியாகினர். உயிரிழந்தவர்களில் பெரும்பாலோனர் ராணுவ வீரர்கள் என்றும், மூன்றாவது முறையாக இந்த பகுதியில் தற்கொலைப் படை தாக்குதல் நடந்திருப்பதாகவும் அந்நாட்டு உள்துறை அமைச்சர் அப்தால் கான் தெரிவித்தார்.