Publish Date: Mon, 16 Jul 2007 (12:15 IST)
Updated Date: Sat, 22 Feb 2014 (19:00 IST)
இங்கிலாந்து கிளாஸ்கோ விமான நிலைய தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்டு பிணைய விடுதலை வழங்கப்பட்ட இந்திய மருத்துவர் ஹனீஃப்பின் விசாவை ஆஸ்ட்ரேலிய அரசு ரத்து செய்துள்ளது.
இங்கிலாந்து கிளாஸ்கோ விமான நிலைய கார் குண்டு தாக்குதல் தொடர்பாக இந்திய மருத்துவர் முகமது ஹனீஃபை ஆஸ்ட்ரேலியா காவல் துறையினர் கைது செய்தார். கடந்த 10 நாட்களாக காவலில் வைத்து விசாரிக்கப்பட்ட நிலையில், ஹனீஃப் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், இன்று காலை பிரிஸ்போன் நீதிமன்றம் ஹனீஃப்பிற்கு நிபந்தனையுடன் கூடிய பிணைய விடுதலை வழக்கியது. பிணைய விடுதலை வழங்கப்பட்ட சிறிது நேரத்திலேயே ஹனீஃப்பின் விசா ரத்து செய்வதாக ஆஸ்ட்ரேலிய அரசு தெரிவித்துள்ளது.
இது குறித்து கூறிய ஆஸ்ட்ரேலிய குடியுரிமை துறை அமைச்சர் கெவின் ஆண்ட்ரஸ், ஹனீஃப்பிற்கு இன்னும் நன்னடத்தை சோதனை நடத்தப்படவில்லை என்றும், எனவே அவரது விசா ஆஸ்ட்ரேலிய குடியுரிமைச் சட்டப்படி ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.