Publish Date: Sat, 14 Jul 2007 (11:31 IST)
Updated Date: Sat, 14 Jul 2007 (11:28 IST)
இங்கிலாந்து குண்டு வெடிப்பு முயற்சியில் தொடர்பிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இந்திய மருத்துவர் மொஹம்மது அனீஃப் மீது ஆஸ்ட்ரேலிய காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.
27 வயதாகும் அனீஃப் மீது, இங்கிலாந்தில் வெடிகுண்டுகளை நிரப்பிய கார்களைக் கொண்டு தாக்குதல் நடத்த முயன்றதில் நேரடி தொடர்பிருப்பதாக குற்றம்சாட்டப்படவில்லை.
எனினும், தாக்குதல் முயற்சியில் தொடர்பிருக்கும் பயங்கரவாதிகளுக்கு செல்பேசி சிம்கார்டுகளை கொடுத்தல், மற்றும் சில உதவிகள் செய்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த குற்றத்திற்கு சுமார் 15 ஆண்டுகால சிறைத் தண்டனை வழங்க வாய்ப்புள்ளது.
தவறு என்று தெரிந்தும் பொறுப்பற்ற முறையில் பயங்கரவாதத்திற்கு உதவி செய்திருப்பதாக அனீஃப் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஆஸ்ட்ரேலிய காவல்துறையின் ஆணையர் மிக்கி கீல்டி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்தில் வெடிகுண்டுகளை நிரப்பிய கார்களைக் கொண்டு தாக்குதல் நடத்த நடந்த முயற்சியில் தொடர்பிருப்பதாக கைது செய்யப்பட்டதில் இவர் இரண்டாவதாகும். விமான நிலையத்தில் நடத்தப்பட்ட தாக்குதலிலும் இவருக்கு தொடர்பிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.