Publish Date: Tue, 19 Jun 2007 (13:51 IST)
Updated Date: Mon, 24 Feb 2014 (18:56 IST)
அணு பயங்கரவாதத்தை ஒடுக்க சர்வதேச அளவில் அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து செயல்படுவதற்கு வழிவகுக்கும் புதிய சர்வதேச உடன்படிக்கையில் அனைத்து நாடுகளும் கையெழுத்திட வேண்டுமென ஐக்கிய நாடுகள் சபை கோரிக்கை விடுத்துள்ளது!
ஐ.நா. தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஐ.நா.வின் மூத்த அதிகாரி லாரி ஜான்சன், அணு பயங்கரவாத நடவடிக்கைகளை முன்னரே தடுக்க வேண்டுமெனில் உலக நாடுகளிடையே முழு ஒத்துழைப்பு அவசியமாகும் என்று கூறினார்.
பேரழிவு ஆயுதங்கள் பயங்கரவாதிகளின் கைகளுக்குச் சென்றுவிடும் சாத்தியம் தொழில்நுட்ப மேம்பாட்டின் காரணமாக அதிகரித்து வருகிறது என்றும், அதனைத் தடுப்பதற்கான முயற்சிகளையும் தாண்டி அந்த ஆபத்து அதிகரித்து வருகிறது என்றும் கூறிய லாரி ஜான்சன், ஐ.நா.வின் சட்ட விவகாரங்களுக்கான உதவி பொதுச் செயலராக உள்ளார்.
நியூயார்க்கில் உள்ள ஐ.நா. தலைமையகத்தில் அணு பயங்கரவாதம் தொடர்பான சிறப்பு விவாதத்தில் கலந்துகொண்டு இவ்வாறு கூறிய லாரி ஜான்சன், அணு பயங்கரவாதத்தில் ஈடுபடுவோரை தடுக்கவும், தண்டிக்கவும் யதார்த்தமான நடவடிக்கைகளை மேற்கொள்ள சர்வதேச அளவிலான ஒத்துழைப்பும், ஒருங்கிணைந்த முயற்சியும் அவசியம் என்று கூறினார்.
2005 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13 ஆம் நாள் அணு பயங்கரவாதத்தை ஒடுக்குவதற்கான சர்வதேச உடன்படிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது. ரஷ்யா முன்மொழிந்த இந்த சட்ட ரீதியான உடன்படிக்கையில் இதுவரை 115 நாடுகள் கையெழுத்திட்டு ஏற்றுக்கொண்டுள்ளன.