Publish Date: Fri, 20 Jun 2008 (14:17 IST)
Updated Date: Fri, 20 Jun 2008 (14:13 IST)
சஹாரா பாலைவனத்தில் உருவாகும் தூசுப் புயல் வான் வெளியில் எழும்பி அட்லாண்டிக் மேற்குக் கடல் பகுதிக்கு மேல் வீசுகிறது. இதனால் காற்றில் சேரும் அதிகப்படியான தூசுகளால் கடல் நீரை அடையும் சூரிய வெப்பத்தின் அளவு குறைகிறது. இதனால் கடலின் மேற்புற நீர் குளிரடைகிறது. அவ்வாறு குளிரடைவதால் பலத்த சேதங்களை விளைவிக்கும் புயல்கள் ஏற்படும் வாய்ப்புகளும் குறைகிறது என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
அட்லாண்டிக் கடல் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு வரும் அமெரிக்காவின் வானிலை துணைக்கோள் ஆய்வுகளுக்கான கூட்டுறவு நிறுவனம் (சி.ஐ.எம்.எஸ்.எஸ்.), இந்த ஆண்டின் துவக்கத்திலேயே அட்லாண்டிக் கடல் பகுதிகளில் ஆப்பிரிக்க தூசுப் புயலால் கடல் நீர் குளிரடைந்து விடும் என்று கூறியிருந்தது. இதனை வைத்துக் கொண்டு தற்போது வானிலை ஆய்வாளர்கள் இந்த ஆண்டின் தட்ப வெப்பம், புயல் நிலவரங்களை கணித்துள்ளனர்.
ஆப்பிரிக்க சஹாரா பாலைவனத்தின் தூசுப் புயலால் மேற்புற கடல் நீரின் வெப்ப நிலை எந்த அளவுக்கு குறையும் என்பதற்கான கணினி மாதிரியை உருவாக்கி உள்ளதாக இந்த ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆனால் தூசுப் புயலால் கடல் நீர் பெரிய அளவிற்கு குளிரடையும் என்று கூற முடியாது என்று கூறியுள்ள ஆய்வாளர்கள், புயல் காற்றின் தீவிரம் எந்த அளவிற்கு இருக்கும் என்பதை தற்போது கணித்து விடலாம் என்று கூறியுள்ளனர்.
கடல் நீரின் மேற்பரப்பு வெப்ப நிலை அதிகமாக இருந்தால் 5ஆம் அபாய எச்சரிக்கை புயல்கள் உருவாகலாம்.
2005ஆம் ஆண்டு ஏற்பட்ட மிகப்பெரிய புயல்கள் அனைத்தும்...
கடல் நீர் மேற்பரப்பு வெப்ப நிலை அதிகரிப்பால் 5ஆம் அபாய எச்சரிக்கை புயல்களாக உருமாறின என்கின்றனர் இந்த ஆய்வாளர்கள். 2005ஆம் ஆண்டு மிகப்பெரிய அளவில் 4 புயல்கள் வீசியது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் நடப்பு ஆண்டில் சஹாரா தூசு மண்டலம் உருவாக்கும் தூசுப் புயலால் அட்லாண்டிக் கடல் நீரின் மேற்பரப்பு வெப்ப நிலை 1.1 செல்சியஸ் குறையலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இப்போது இந்த தூசு மண்டல நடவடிக்கைகளை கொண்டு கடல் நீர் வெப்ப நிலையில் ஏற்படும் மாற்றங்களை ஓரளவு சரியாக கூறிவிட முடியும் என்றும் இதன் விளைவாக பெரும் புயல்காற்றுகளை கணித்து விடலாம் என்றும் இந்த ஆய்வாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இதேப்போன்றதொரு தூசுப் புயல் கடந்த மாதம் 15ஆம் தேதி வட இந்திய மாநிலங்களைத் தாக்கியது. உத்திரப்பிரதேசத்தில் இருந்து பீகார், மேற்கு வங்கம் வரை அடித்துச் சென்ற அந்த தூசுப் புயலில் பல இடங்களில் மரங்கள் சாய்ந்தன, விளம்பர பலகைகள் விழுந்தன, குடிசைகள் சின்னாபின்னமாகின, 129 பேர் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடப்பட்டது.
இந்த தூசுப் புயல் ஆக்ராவைத் தாக்கிய போது எடுத்த வீடியோ காட்சியை நீங்கள் பார்க்கலாம்.
Webdunia
Publish Date: Fri, 20 Jun 2008 (14:17 IST)
Updated Date: Fri, 20 Jun 2008 (14:13 IST)