Publish Date: Wed, 13 Feb 2008 (12:57 IST)
Updated Date: Wed, 13 Feb 2008 (12:57 IST)
இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை கடந்த ஐந்து ஆண்டுகளில் பாதிக்கும் அதிகமாக குறைந்துள்ளது என்ற அதிர்ச்சி தகவல் சமீபத்திய ஆய்வில் வெளியாகியுள்ளது.
நமது நாட்டின் தேசிய விலங்கான புலிகளின் எண்ணிக்கை பற்றி கடந்த 2002 ஆம் ஆண்டு நடந்த கணக்கெடுப்பில், நாடு முழுவதும் 3,500 புலிகள் இருப்பதாக தெரியவந்தது. ஆனால், சமீபத்திய கணக்கெடுப்பின்படி, வெறும் 1,411 புலிகளே உள்ளதாக தெரியவந்துள்ளது.
நமது நாட்டிலேயே மத்திய பிரதேசத்தில் தான் அதிக புலிகள் (300) உள்ளன. அதற்கு அடுத்து, உத்தரகண்ட்டில் 178 புலிகளும், உத்தரபிரதேசத்தில் 109-ம், மராட்டியத்தில் 103-ம், ஆந்திராவில் 95-ம், ஒரிசாவில் 45-ம், ராஜஸ்தானில் 32-ம், சத்தீஷ்கரில் 26-ம், பிகாரில் 10-ம் உள்ளதாக கணக்கெடுப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.
புலிகளின் இந்த உச்சகட்ட அழிவை உணர்ந்திருந்தும், நிலைமையை சமாளிக்கும் வகையில் 'பழைய கணக்கெடுப்பு முடிவுகள் தவறானவை' என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பின செயலாளர் ராஜேஷ் கோபால் கூறுகையில், "புலிகளின் காலடித்தடத்தை கொண்டு கடந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. அதில் அதிக தவறு நிகழ வாய்ப்புள்ளது. சமீபத்திய புலிகள் கணக்கெடுப்பு புதிய முறைகளின்படி நடத்தப்பட்டுள்ளது.
தற்போது நாட்டின் 17 மாநில வனப்பகுதிகளில் புலிகள் உள்ளன. ஓட்டுமொத்த புலிகளின் எண்ணிக்கை குறைந்தபட்சம் 1,165 ஆகவும், அதிகபட்சம் 1,411 ஆகவும் இருக்கலாம். எனினும், புலிகள் பாதுகாப்பு வனப்பகுதி எல்லைக்கு அப்பால் குறைவான புலிகளே உள்ளன" என்றார்.
'புலிகளின் எண்ணிக்கை குறைந்தால் மான் போன்ற தாவர உண்ணிகளின் எண்ணிக்கை அதிகரித்துவிடும். இது சுற்றுச்சூழல் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கிவிடும்' என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அஞ்சுகின்றனர். இவற்றை எல்லாம் கடந்து, புலி என்ற ஒரு அற்புதமான விலங்கின் இழப்பை நாட்டின் பொருளாதாரம் 15 புள்ளிகளாக உயர்ந்தால்கூட ஈடுகட்டிவிட முடியாது.
வாழ்வாதாரம் இன்மை, வேட்டையாடுதல் போன்ற முக்கிய காரணங்களால் புலிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதாகவு ஒப்புக்கொள்ளும் அரசாங்கம், அவற்றைத் தடுக்க போதிய நடவடிக்கைகளை முடுக்கிவிட தயங்கி வருகிறது.
பங்குச்சந்தை, தகவல் தொழில்நுட்பம் போன்றவற்றின் இழப்பை வேண்டுமானால் சரிகட்டி விட முடியும். ஆனால் இயற்கை செல்வத்தின் அழிவுக்கு எந்த மாற்றும் கிடையாது என்பதை அரசாங்கம் மட்டுமல்ல மனிதராய் பிறந்த ஒவ்வொருவரும் உணர வேண்டும்.
புலிகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் குறைந்து வரும் இதேநிலை தொடர்ந்தால், அழிந்துவரும் பட்டியலையடுத்து, புலி என்ற விலங்கை வருங்கால சந்ததியினருக்கு வரைந்துதான் காண்பிக்கும் நிலைதான் ஏற்படும்.