முகேஷ் அம்பானியும்,அனில் அம்பானியும் இந்தியாவைச் சுரண்டி டன் கணக்கில் சம்பாதிக்கின்றனர் - அர்விந்த் கெஜ்ரிவால் கடும் தாக்கு!
Publish Date: Sat, 15 Feb 2014 (12:54 IST)
Updated Date: Sat, 15 Feb 2014 (12:52 IST)
எந்த ஒரு இந்திய முதல்வரும் இதுவரை எடுக்காத ஒரு விமர்சன அணுகுமுறையைக் கையாண்டார் ராஜினாமா செய்த டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால்.
நாட்டின் இருபெரும் கட்சிகள் அம்பானிகள் உள்ளிட்ட முதலாளிகளின், மூலதனங்களின் பாக்கெட்டில் நெளிந்து கொண்டிருக்க, இவர் மட்டும் அம்பானிகளையும் டாட்டாக்களையும் கடுமையாக தாக்கத் தொடங்கினார்.இந்த அமைப்பைச் சுரண்டி டன் கணக்கில் பணத்தில் அவர்கள் புரள்வதாக ஒரு அறிக்கையை அவர் வெளியிட்டார். முதன் முதலாக நிறுவனங்கள் அர்விந்த் கெஜ்ரிவால் மீது அவரது அரசியல் காரணங்களுக்காஅ கடும் கோபமடைந்து பதில் அறிக்கைகளை வெளியிட்டுக்கொண்டிருக்கின்றன.அனில் அம்பானியை முதலில் பிடித்தார் கெஜ்ரிவால், இவரது மின் வினியோக நிறுவனமான பி.எஸ்.இ.எஸ். யமுனா, ராஜ்தானி ஆகிய நிறுவனங்கள் பிளாக் மெய்ல் செய்கிறது என்றார். காரணம் கெஜ்ரிவால் மின் கட்டணத்தை பாதியாக குறைத்தவுடன் சப்ளை கிடையாது என்று மறுத்துள்ளது அனில் அம்பானி நிறுவனம்.
கெஜ்ரிவால் அசரவில்லை இவர்களது உரிமங்கள் ரத்து செய்யப்படும் என்றும் குறிப்பிட்ட விலைக்கு சப்ளை செய்ய பிற நிறுவனங்கள் உள்ளன என்றார். இதோடு நிற்காமல் அனில் அம்பானி அரசியல் செய்கிறார் என்றார்.
உடனே வெறியான ரிலையன்ஸ் நிறுவனம் "டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் எங்கள் நிறுவனத்தின் தலைமை அதிகாரியை டுவிட்டரில் தாக்கியிருப்பது ஏமாற்றமளிக்கிறது" என்று கூறியது.
இயற்கை எரிவாயு விலையை உயர்த்தியதற்காக முகேஷ் அம்பானி, வீரப்ப மொய்லி, முரளி தியோரா ஆகியோர் மீது ஊழல் எதிர்ப்பு வழக்கு தொடர்ந்தார் கெஜ்ரிவால்.
உடனே அரண்டு போன ரிலையன்ஸ் மான நஷ்ட வழக்கு போடப்போகிறோம் என்று மிரட்டியது.
டாடா குழுமத்திற்கு டெல்லி மின் வினியோக உரிமையை வழங்க இருந்தார் கெஜ்ரிவால் ஆனால் அவர்களும் இந்த விலைக்கு கட்டுப்படியாகாது என்று கையை உதறிவிட்டனர்.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசை 10 ஆண்டுகளாக ரிலையன்ஸ் குழுமம் நடத்தி வந்தது என்றும் இப்போது இது மோடியை ஆதரிக்கிறது என்றும் மேலும் ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார் கெஜ்ரிவால்.
இவ்வாறு அதிகார மையங்கள் விரும்பத் தகாத பல நல்ல விஷயங்களை துவக்கி வைத்தார் கெஜ்ரிவால். அதாவது KG டி6-இல் ரிலையன்ஸ் என்ன செய்கிறது என்பதை கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆரம்பம் முதலே கூறி வருகின்றனர். ஆந்னால் ஒரு முதலராக அர்விந்த் கெஜ்ரிவால் இதனை மக்களிடம் கொண்டு சென்றது பெரிய விஷயமே.
அவரை தொடர்ந்து ஆட்சி நடத்த விடுமா அதிகார மையம்?