சென்னை நகரின் 369 வது நிறுவன நாள்!
Publish Date: Fri, 22 Aug 2008 (16:42 IST)
Updated Date: Fri, 22 Aug 2008 (16:40 IST)
இன்றைய சென்னை மாநகரம், 1639ஆம் ஆண்டில் மதராசா பட்டிணமாக இருந்தபோது, இந்தியாவில் தங்களின் வணிக சாம்ராஜ்யத்தை நிலைநிறுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருந்த வெள்ளையர்கள், தாங்கள் நிலையாக காலூன்ற இந்த மதராசா பட்டிணம் என்ற கடலோர கிராமத்தை வாங்கினர்.இதற்கான பத்திரம் 1639ஆம் ஆண்டு ஜூலை 22ஆம் தேதியிட்டு எழுதப்பட்டிருந்தாலும், அப்போது வெள்ளையரின் கிழக்கிந்தியக் கம்பெனியின் நிர்வாகி பிரான்சிஸ் டே
இந்தியா வந்து சேராததால் அந்த விற்பனை பத்திரம் ஒரு மாத காலத்திற்குப் பிறகே கையெழுத்திடப்பட்டது என்று நம்பப்படுகிறது. பிரான்சிஸ் டே இந்தியா வந்தபிறகு மதராசா பட்டிணத்திற்குச் சொந்தக்காரர்களான நாயக்கர் ஆட்சியாளர்களின் சந்திரகிரி கோட்டையில் பத்திரம் கையெழுத்தானது. எனவே இந்த நாளே சென்னை நகரம் உருவான நாளாக கருதப்படுகிறது.கிழக்கிந்தியக் கம்பெனி வாங்கிய அந்த இடத்தில்தான் இன்றுள்ள செயின்ட் ஜார்ஜ் கோட்டை கட்டப்பட்டுள்ளது. இக்கோட்டை கட்டப்பட்டபோது கடல் மிக அருகிலிருந்தது. அங்கு ஒரு இறங்குதுறையும் இருந்தது. அதை வெள்ளையர் மேம்படுத்தி, தூரத்தில் கப்பல்கள் நிற்க, சரக்குகளும் பயணிகளும் கப்பலில் இருந்து இறங்கி படகுகளில் சிறிது தூரம் பயணித்து இந்த இறங்குத் துறையை அடைவார்கள்.1639
இல் வாங்கிய அந்த இடத்தில்தான் பின்னாளில் செயின்ட் ஜார்ஜ் கோட்டை கட்டப்பட்டது. அதனை மையமாகக் கொண்டே சென்னை நகரம் உருவானது. இக்கோட்டையில் பணியாற்ற வந்த தொழிலாளர்கள் தங்குவதற்காக கோட்டையின் மேற்குப்பகுதியில் ஒரு குடியிருப்புப் பகுதி உருவாக்கப்பட்டது.
அதுதான் ஜார்ஜ் டவுன் ஆகும். அந்தப் பகுதியில்தான் சென்னை மாநகராட்சி இயங்கும் ரிப்பன் கட்டடம் கட்டப்பட்டது (அதற்கும் 300 வயது முடிந்துவிட்டது). இதற்குப் பிறகுதான் கடற்கரையில் இருந்த அந்த இறங்குத்துறையை ஒரு துறைமுகமாக மாற்றும் திட்டம் துவங்கியது. வெள்ளையரின் கிழக்கிந்தியக் கம்பெனியின் செல்வாக்கும் வணிகமும் அதிகரிக்க மதராஸ் பட்டணம் வளர ஆரம்பித்தது.18
வது நூற்றாண்டில் வெள்ளையரின் ஆதிக்கம் முழுமையாக நிலைப்பெற்றுவிட்ட நிலையில், மேய்ச்சல் நிலமாக இருந்த மந்தவெளி (அடையாறு வரை), மைலாப்பூர், மாம்பலம் ஆகிய கிராமங்கள் மதராஸ் பட்டண விரிவாக்கத்திற்குள் கொண்டுவரப்பட்டன. இதேபோல செயின்ட் ஜார்ஜ் கோட்டையின் மேற்கிலும், வடக்கிலும் இருந்த கொண்டித்தோப்பு, ராயபுரம், திருவொற்றியூர், பெரம்பூர் பகுதிகளும், சிந்தாதிரிப்பேட்டையும் இணைய மதராஸ் பெரும் பட்டணமானது. மதராஸை நிர்வகிக்க ரிப்பன் கட்டடம் கட்டப்பட்டது.
இப்படி படிப்படியாக 4 நூற்றாண்டுக்காலமாக வளர்ந்து பெருகி இன்று மாநகரமாக திகழ்ந்துவரும் சென்னை, ஒரு வரலாற்று நகரமாகவும், முன்னேறிய முதல் நிலை நகரங்களில் ஒன்றாகவும் உள்ளது.