அணு சக்தி ஒத்துழைப்பு: விழிப்புடன் கவனிப்போம்!
Publish Date: Wed, 23 Jul 2008 (18:02 IST)
Updated Date: Wed, 23 Jul 2008 (18:01 IST)
இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கான முழு அதிகாரத்தை மன்மோகன் அரசு பெற்றுவிட்டது! நாடாளுமன்ற மக்களவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் அருதிப் பெரும்பான்மை
வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ள மன்மோகன் சிங் அரசு, அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தல் வரை தடையற்றுப் பணியாற்றுவதற்கான வாய்ப்பை பெற்றுவிட்டது.மக்களவையில் மொத்தமுள்ள 542 உறுப்பினர்களில், அவைத் தலைவர் சோம்நாத்தை தவிர்த்து 541 உறுப்பினர்களில் 10 பேர் வாக்கெடுப்பில் பங்கேற்காத (புறக்கணித்த) நிலையில், 275 உறுப்பினர்கள் அரசிற்கு ஆதரவாகவும், 256 உறுப்பினர்கள் அரசிற்கு எதிராகவும் வாக்களித்துள்ளனர். இவர்களில் முக்கிய எதிர்க்கட்சியான பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த 7 உறுப்பினர்கள் அரசிற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். அக்கட்சியின் தலைமையிலான தேச ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஐக்கிய ஜனதா தளக் கட்சியைச் சேர்ந்த 2 உறுப்பினர்கள், பிஜூ ஜனதா தளக் கட்சி உறுப்பினர் ஒருவர் என பா.ஜ.க. கூட்டணிச் சேர்ந்த 10 உறுப்பினர்கள் மன்மோகன் அரசிற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். இவர்கள் மட்டுமின்றி, மூன்றாவது அணியில் இடம்பெற்றுள்ள தெலுங்கு தேசம் கட்சியின் இரண்டு உறுப்பினர்களும், மதச் சார்பற்ற ஜனதா தள உறுப்பினர் ஒருவரும் சேர்த்து மொத்தம் 13 உறுப்பினர்கள் அரசிற்கு ஆதரவாக வாக்களிக்க, எதிர்பார்த்தைவிட அதிக வாக்குகள் பெற்று மன்மோகன் அரசு தனக்கு ஏற்பட்ட ஆபத்திலிருந்து தப்பியுள்ளது.ஆதரவாக வாக்களித்த உறுப்பினர்கள் மட்டுமின்றி, வாக்களிப்பில் பங்கேற்காமல் பல எதிர்கட்சி உறுப்பினர்கள் அரசிற்கு உதவியுள்ளனர். பா.ஜ.க.வைச் சேர்ந்த 4 உறுப்பினர்கள், சிவ் சேனாவைச் சேர்ந்த ஒரு உறுப்பினர் உட்பட 8 பேரின் புறக்கணிப்பு இந்த வாக்கெடுப்பில் மிக முக்கிய பங்காற்றியுள்ளது. ஆக எதிர்கட்சிகளில் இருந்து 13+8 = 21 உறுப்பினர்கள் அரசிற்கு எதிராக வாக்களித்திருந்தால், 275- 21 = 254 வாக்குகளைத்தான் அரசு பெற்றிருக்கும். ஆட்சி கவிழ்ந்திருக்கும்.
இது அவர்கள் எதிர்பார்த்த வாக்குகளை (269) விட மிக மிகக் குறைவாகும். அந்த வாக்குகள் கட்சிகளின் நிலைப்பாட்டின்படி வாக்களிக்கப்பட்டிருந்தால் 256+21 = 277 வாக்குகள் ஆகியிருக்கும். இது எதிர்கட்சிகளின் எதிர்பார்த்த வாக்குக்(267) கணக்கை விட அதிகமாகும். எனவே ஆளும் கூட்டணியில் இருந்தும் அரசிற்கு எதிராக வாக்குகள் விழுந்துள்ளது தெரிகிறது.
மொத்தத்தில் இந்த வெற்றி, பிரதமர் மன்மோகன் சிங் கூறியதுபோல, அரசின் செயல்பாட்டிற்கோ அல்லது அணு சக்தி ஒப்பந்தம் நிறைவேற வேண்டும் என்பதற்கோ கிடைத்தது அல்ல என்பது உறுதியாகிறது. அரசைக் காப்பாற்ற காங்கிரஸ் கட்சி எடுத்த ‘முயற்சிகளுக்கு’ கிடைத்த வெற்றியே இது. ஆனாலும் ஊழலைப் போல இதுவும் நிரூபிக்க முடியாத ஒன்றுதான். எனவே தனது அரசிற்கு கிடைத்த வெற்றி இதுவென மன்மோகன் சிங் தாராளமாக மார்தட்டிக்கொள்ளலாம். எதிர்கட்சிகள் தவற விட்ட பெரும் வாய்ப்பு!தனது அரசின் மீது நம்பிக்கை கோரி பிரதமர் மன்மோகன் சிங்
கொண்டுவந்த தீர்மானத்தின் மீது இரண்டு நாட்களாக நடந்த விவாதத்தில், அரசின் செயல்பாட்டை - குறிப்பாக அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்திட அது மேற்கொண்ட அதிவேக நடவடிக்கைகளை பிரச்சனையாக்க எதிர்க்கட்சிகள் தவறிவிட்டன.அரசிற்கு இந்த நெருக்கடி ஏற்படக் காரணமே அணு சக்தி ஒப்பந்தம்தான். ஆனால் விவாதம் அதனை மையமாகக் கொண்டு நடந்தாலும், அது நிறைவேற்றப்படும் முறைமைகள் குறித்து அகில இந்திய அரசியலிலும், ஊடகங்களில் நமது விஞ்ஞானிகளும், மற்ற நிபுணர்களும் எழுப்பிய கேள்விகளை எதிர்க்கட்சிகள் வலிமையாக எழுப்பி விவாதிக்கத் தவறிவிட்டன. இடதுசாரிக் கட்சிகள் நன்கு வாதிட்டன. ஆனாலும் முக்கிய எதிர்க்கட்சியான பா.ஜ.க.வும், எதிர்க் கட்சித் தலைவரான அத்வானியும் ஆழமான வாதங்களை எடுத்து வைக்கவில்லை. அரசை விமர்சித்ததைவிட பிரதமர் மன்மோகன் சிங்கை குறிவைத்து தனது வாதத்தை அத்வானி முன்வைத்து பேசியது பிரச்சனையை திசை திருப்பிவிட்டது. எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு கையூட்டுக் கொடுத்து ஆதரவைப் பெற காங்கிரஸ் முயற்சிக்கிறது என்று கூறி, கத்தை கத்தையாக 1,000 ரூபாய்
நோட்டுக்களை மக்களவைக்கே கொண்டு வந்து கொட்டி பா.ஜ.க. மேற்கொண்ட செயல் மொத்த விவாகாரத்தையும் சராசரி அரசியலாக்கிவிட்டது. அனைத்து உறுப்பினர்களும் பேசி முடித்த பிறகு கடைசியாக பிரதமர் பதில் சொல்ல எழுந்தபோது, அவரை பேச விடாமல் பா.ஜ.க. உறுப்பினர்கள் தொடர்ந்து முழக்கங்கள் எழுப்பியதால், நாடாளுமன்றத்தின் வாயிலாக இந்த நாட்டிற்கு அவர் சொல்ல வேண்டிய பதில் தடுக்கப்பட்டது. பிரதமரின் பதில்கள் ஏமாற்றமே!தன்னை விமர்சித்த எதிர்க்கட்சித் தலைவர் அத்வானியை கடுமையாக விமர்சித்து மூன்று பத்திகளில் பதிலளித்திருந்த பிரதமர் மன்மோகன் சிங், தனது ஆட்சிக்கு நெருக்கடி ஏற்படக் காரணமான அணு சக்தி
ஒப்பந்தப் பிரச்சனைத் தொடர்பாக நாடாளுமன்றத்திலும், வெளியிலும் எழுப்பப்பட்ட குறிப்பான கேள்விகளுக்கு பதிலளிக்காமல், இப்பிரச்சனையில் ஆரம்பத்திலிருந்து கூறிவந்ததுபோல பொத்தாம் பொதுவாகவே பதிலளித்துள்ளார்.அணு சக்தி ஒப்பந்த நிறைவேற்றத்தில் அரசின் அணுகுமுறையில் முன்னிற்குப் பின் இருந்த முரண்பாடுகளுக்கு பிரதமர் விளக்கம் தந்திருக்க வேண்டும்.
அரசு இதில் அவசரம் காட்டுவதன் காரணம் என்ன? இந்த ஒப்பந்தத்தின் கீழ் நாம் அமைக்கும் அணு உலைகளைக் கொண்டு பெறும் மின்சாரம் அதிக விலையுடையதாக இருக்குமா? மற்ற நாடுகளுடனான அணு சக்தி தொழில்நுட்ப பரிவர்த்தனைகளை வாஷிங்டன் கட்டுப்படுத்தாது என்பது என்ன நிச்சயம்? நமது அணு மின் உலைகளுக்கு தேவைப்படும் எரிபொருள் தடையின்றி கிட்டும் என்பது எப்படி உறுதி செய்யப்பட்டுள்ளது? என்பது போன்ற பல கேள்விகளுக்கு பிரதமர் பதில் அளித்திருந்தால் அது நாட்டு மக்களை மதித்து அவர் பதிலளித்துள்ளார் என்று பெருமைபட்டிருக்கலாம். ஆனால், ஒரு சராசரி அரசியல்வாதியாக, தனக்கு எதிராக வைக்கப்பட்ட வாதங்களுக்கு மட்டும் பதில் சொல்லிவிட்டு முக்கிய பிரச்சனையில் அளிக்க வேண்டிய பதிலை மிக சாமர்த்தியமாக பிரதமர் தவிர்த்துள்ளார் என்றே கருத இடமளிக்கிறது.மக்கள் விழுப்புடன் கவனிக்க வேண்டும்!நாட்டின் எதிர்காலம் தொடர்பான ஒரு முக்கியப் பிரச்சனை ஒரு நம்பிக்கைத் தீர்மானத்தின் முடிவின் மூலம் மிக சுலபமாக கையாளப்பட்டுவிட்டது. இனி இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை நிறைவேற்றும் பணிகள் வேகமடையும். நமது நாட்டின் தேச நலனைக் கருத்தில் கொண்டு நிறைவேற்றப்படுகிறது என்று அரசு கூறியுள்ளது அல்லவா? எனவே, அதன் நிறைவேற்றத்தை இந்திய மக்கள் கூர்ந்து கவனிக்க வேண்டும். இனி அரசியல் கட்சிகளை எதிர்பார்த்து நடப்பதற்கு ஏதுமில்லை. மக்கள்தான் தங்கள் எதிர்கால நலன் காப்பாற்றப்படுகிறதா அல்லது அடகு வைக்கப்படுகிறதா என்பதை உன்னிப்பாக கவனிக்க வேண்டும். இந்திய மேற்கொண்டுவரும் அணு சக்தி தொடர்பான மூன்று கட்ட திட்டத்திற்கு
இந்த ஒப்பந்தத்தினால் எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்று இந்திய அணு சக்தி ஆணையத்தின் தலைவர் அனில் ககோட்கர் கூறியுள்ளது நம்பத்தக்கது. அவர்கள் (நமது விஞ்ஞானிகள்) நமது நாட்டின் நலனை நிச்சயம் விட்டுத் தரமாட்டார்கள். நாம் விழிப்புடன் இருந்து அவர்களுக்கு உறுதுணையாக இருப்போம்.
Webdunia
Publish Date: Wed, 23 Jul 2008 (18:02 IST)
Updated Date: Wed, 23 Jul 2008 (18:01 IST)