Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

காஷ்மீரில் அதிகரிக்கும் தற்கொலைகள்!

காஷ்மீரில் அதிகரிக்கும் தற்கொலைகள்!
, செவ்வாய், 15 ஜூலை 2008 (20:15 IST)
காஷ்மீரில் 20 வயதுக்கு கீழுள்ள இளைஞர்கள், இளம் பெண்கள், திருமணமான பெண்கள் ஆகியோர் தற்கொலை செய்துகொள்வது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

webdunia photoFILE
நேற்றும் காஷ்மீரில் இளம் பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாக செய்தி ஒன்று வெளியானது. ஆனால் இந்தத் தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை.

காஷ்மீரில் நாளொன்றுக்கு இரண்டு தற்கொலைகளாவது நிகழ்கிறது என்று சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

சொந்தப் பிரச்சனைகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் இந்த தற்கொலைகளுக்கு கூறப்பட்டாலும், 20 ஆண்டுகாலமாக அங்கு நிலவும் வன்முறையான, அமைதியற்ற சமூக, அரசியல் சூழலே இதற்கு பிரதான காரணம் என்று அரசு மன நோய் மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர் அர்ஷத் ஹுஸைன் கூறுகிறார்.

1989ஆம் ஆண்டு வரை உலகிலேயே தற்கொலை எண்ணிக்கையில் குறைவாக இருந்த காஷ்மீரில் தற்போது தற்கொலைகள் அதிகரித்துள்ளது. 2006ஆம் ஆண்டு 61 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இந்த ஆண்டமுதல் 5 மாதங்களில் மட்டும் 42 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்று அதிகார பூர்வ தகவல்கள் தெரிவித்துள்ளன.

1989 ஆம் ஆண்டு மாநில மன நல மருத்துவமனைகளில் 1700 நோயாளிகளே இருந்தனர். ஆனால் தற்போது மாநில அரசு மன நல காப்பகம், ஸ்ரீநகர் பொது மருத்துவமனைகள் இரண்டிலும் சேர்த்து மன நோய்க்கு ஆளானவர்கள் எண்ணிக்கை 1 லட்சம் பேர்களாக அதிகரித்துள்ளதாக அங்கு மருத்துவம் செய்து வரும் அர்ஷத் ஹுஸைன் தெரிவித்துள்ளார்.

துக்கத்தை மறக்க முடியாமல்...

அவர் குறிப்பாக மன நோய்க்கு ஆளான ஒரு குடும்பத்தைப் பற்றி கூறுகிறார். ஸ்ரீநகரில் வசித்து வரும் ரெஹ்மத்துல்லா பட் என்பவரின் ஊனமுற்ற மகனை குடும்பத்தினரின் கண் எதிரே இந்திய பாதுகாப்பு

படையினர் சுட்டுக் கொன்றதால் அவரும் அவரது குடும்பத்தினரும் தூக்கமிழந்து மன நோய்க்கு ஆளாகி வருவதாக கூறுகிறார்.

இந்த துயரச் சம்பவம் நடந்து இப்போது 2 ஆண்டுகள் ஆகியும் இவரது மகள் தினமும் அழுது கொண்டிருப்பதாகவும், மனைவிக்கு அந்த சம்பவத்திற்கு பிறகு கடுமையான தலைவலியும், முதுகு வலியும் ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஒரு தீவிரவாதி என்று தவறாக பாதுகாப்பு படையினர் தன் மகனை சுட்டுக் கொன்றதை பார்த்த‌திலிருந்து தன் குடும்பம் மன நோய்க்கு ஆளாகியிருப்பதாக அவர் கூறியுள்ளார்.

பாதுகாப்புப் படையினர் பின்பு தங்கள் தவறை ஒப்புக் கொண்டாலும், மகனை சுட்டுக் கொன்றதற்கு நீதி கிடைக்குமா, ஒப்புக் கொண்டதால் மகனை திருப்பி அளிக்கவா முடியும்? என்று அவர் கேள்வி எழுப்புகிறார்.

இஸ்லாம் மதத்தில் தற்கொலை செய்து கொள்வது கடவுளுக்கு எதிரான செயல் என்று கூறப்பட்டிருந்தாலும், தற்போது முஸ்லிம் உலகில் லெபனானிற்கு அடுத்த படியாக காஷ்மீரில் தற்கொலை எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

சுமார் இருபது ஆண்டு காலமாக தீவிரவாதிகளுக்கும் ராணுவத்திற்கும் இடையே நடந்து வரும் போரில், அங்கிருக்கும் ஒவ்வொரு குடும்பத்திலும் குறைந்தது ஒருவராவது பலியாகியுள்ளதாகவும், ஏராளமானோர் காணாமல் போவதாகவும் அங்குள்ளவர்கள் தெரிவிப்பதாக பத்திரிக்கை செய்திகள் கூறுகின்றன.

இந்த அகால மரணங்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் குறிப்பாக இளைஞர்கள் காணாமல் போவது ஆகியவற்றால் காஷ்மீர் மக்களிடையே மன உளைச்சல் அதிகரித்து வருகிறது. தற்போது மனச்சிதைவு நோய் உள்ளிட்ட, மன உளைச்சல், வன்முறைக்கு பிறகான மன அழுத்தம், கற்கும் திறனின்மை ஆகியவையும் சேர்ந்து கொண்டுள்ளதாக மன நோய் மருத்துவர் அர்ஷத் ஹுஸைன் கூறுகிறார்.

ஒவ்வொரு குடும்பத்திலும் வன்முறைக்கு சிலர் பலியாவதால் அந்த குடும்ப உறுப்பினர்கள் மன நோயாளிகளாகின்றனர். வீட்டிற்கு ஒரு மன நோயாளி என்ற விகிதத்தில் அங்கு மன ஆரோக்கிய நிலவரம் இருந்து வருவதாக பாதிக்கப்பட்ட குடும்பத்தை சேர்ந்த ஒருவர் கூறியதாக டாக்டர் அர்ஷத் ஹுஸைன் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil