அணு சக்தி : கண்காணிப்பு ஒப்பந்த விவரங்களை வெளியிடத் தயங்குவது ஏன்?
Publish Date: Thu, 03 Jul 2008 (18:15 IST)
Updated Date: Thu, 03 Jul 2008 (18:14 IST)
இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் தொடர்பாக சமாஜ்வாடி கட்சி எழுப்பிய கேள்விகளுக்கு (சந்தேகங்களுக்கு) பதிலளித்து பிரதமர் அலுவலகம் விளக்க அறிக்கை ஒன்றிணை வெளியிட்டுள்ளது.ஆட்சிக்கு ஆதரவு அளித்துவந்த இடதுசாரிகளும், நமது நாட்டின் அணு சக்தி விஞ்ஞானிகளும் எழுப்பிய கேள்விகளுக்கு
பதில் கூற முன்வராத பிரதமர் அலுவலகம், தனது ஆட்சிக்கு ஆபத்து ஏற்பட்டவுடன், சமாஜ்வாடி கட்சியின் ஆதரவைப் பெற்று ஆட்சியை காப்பாற்றிக்கொள்ள அக்கட்சி எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதமாக இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.இந்தியாவின் அயலுறவுக் கொள்கைத் தொடர்பான முடிவெடுக்கும் உரிமை, நமது நாடு கடைபிடித்துவரும் அணு ஆராய்ச்சிக் கொள்கை மற்றும் அது சார்ந்த நடவடிக்கைகள், அமெரிக்க நாடாளுமன்றம் நிறைவேற்றிய ஹென்றி ஹைட் சட்டம், அணு சக்தி ஒத்துழைப்பை நடைமுறைக்குக் கொண்டுவரும் 123 ஒப்பந்தம், நமது அணு உலைகளில் பயன்படுத்தப்படும் இறக்குமதி செய்யப்படும் யுரேனியத்தை மறு சுழற்சி செய்து பயன்படுத்தும் உரிமை, பன்னாட்டு அணு சக்தி முகமையுடன் நாம் செய்துகொள்ள பேசிவரும் கண்காணிப்பு ஒப்பந்தம் ஆகிய ஆறு விடயங்களின் மீது சமாஜ்வாடிக் கட்சி எழுப்பிய கேள்விகளுக்கு இந்த விளக்க அறிக்கையை பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ளது.இந்த விளக்கத்தில் புதிதாக எதுவும் சொல்லப்படவில்லை என்பதை இப்பிரச்சனையை தொடர்ந்து கவனித்து வருபவர்களுக்குத் தெரியும். “அயலுறவு தொடர்பான நமது சுதந்திரமான முடிவெடுக்கும் உரிமையை விட்டுத் தரமாட்டோம், நமது நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்திட நாம் மேற்கொண்டுவரும் ராணுவ ரீதியான அணு
ஆயுத ஆராய்ச்சியை விட்டுத் தரும் பேச்சிற்கே இடமில்லை, பன்னாட்டு அணு சக்தி முகமையுடன் நமக்கென்று தனித்த கண்காணிப்பு ஒப்பந்தம் செய்துகொள்வோம், நமது அணு உலைகளுக்குத் தேவையான அளவிற்கு யுரேனியம் எரிபொருள் கிடைப்பதை உறுதி செய்து கொள்வோம்” என்றெல்லாம் கடந்த 3 ஆண்டுகளாக நமது பிரதமர் தொடர்ந்து (நாடாளுமன்றத்திலும், வெளியிலும்) முழங்கி வந்ததைத்தான் நேற்று இரவு வெளியிடப்பட்ட பிரதமர் அலுவலக அறிக்கையிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால், பன்னாட்டு அணு சக்தி முகமையுடன் நடத்தப்பட்டுவரும் பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப்பட்டு இறுதி செய்யப்படும் நிலையில் உள்ள (அப்படித்தான் பிரதமர் அலுவலக அறிக்கை கூறுகிறது. ஆனால், அதற்கான வரைவு தயார் என்றும், அதனை பன்னாட்டு அணு சக்தி முகமையின் ஆளுநர்களுடன் பேசி இறுதி செய்ய மத்திய அரசிற்கு அனுமதி வழங்க வேண்டும் என்றுதான்
இடதுசாரிகளிடம் கேட்கப்பட்டதாக செய்திகள் வந்தன) கண்காணிப்பு ஒப்பந்த வரைவில் உள்ள விவரங்கள் எதையும் இந்த அறிக்கை வெளிப்படுத்தவில்லை.இன்னமும் ரகசியம் காக்கப்படுகிறது. முன்பு இடதுசாரிகளிடமும், தற்பொழுது சமாஜ்வாடிக் கட்சியுடனும் தனித்துப் பேசி ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்ள முயற்சிக்கும் அரசு, கண்காணிப்பு ஒப்பந்த வரைவு விவரங்களையோ அல்லது பேச்சுவார்த்தை விவரங்களையோ நாட்டு மக்களுக்கு வெளியிடத் தயக்கம் காட்டுவதேன்? இதுவே நமது கேள்வி.அணு சக்தி ஆராய்சியின் மூலம் எரிசக்தி தன்னிறைவிற்கு நமது நாட்டை அழைத்துச் செல்லும் விஞ்ஞானிகள், அரசிற்கு எழுதியுள்ள கடிதங்களுக்கும், பத்திரிக்கைகளில் கட்டுரைகளாக வெளியிட்டு எழுப்பிய குறிப்பான கேள்விகளுக்கும் சிரத்தையுடன் பதிலளிக்காமல் பிரதமர் அலுவலகம் தட்டிக்கழிப்பதேன்? முதலில் 1974, பிறகு 1998 என இரண்டு முறை அணு ஆயுத சோதனை நடத்தி நமது நாட்டின் பாதுகாப்பை உலக அளவில் உறுதி செய்த விஞ்ஞானிகள், இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் தொடர்பாகவும்,
அதற்கு அனுமதி அளித்து அமெரிக்க நாடாளுமன்றம் நிறைவேற்றிய ஹென்றி ஹைட் சட்டத்தின் சாராம்சங்கள் குறித்தும், ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த வழிவகுக்கும் 123 ஒப்பந்தத்தின் குறிப்பிட்ட சில பிரிவுகள் குறித்தும், பன்னாட்டு அணு சக்தி முகமையுடன் நாம் செய்துகொள்ளப்போகும் கண்காணிப்பு ஒப்பந்தம் குறித்தும் எழுப்பும் கேள்விகளுக்கு நாடாளுமன்றத்தின் வாயிலாகவோ அல்லது நேற்று வெளியிடப்பட்டதே அதுபோன்று பிரதமர் அலுவலக விளக்க அறிக்கையாகவோ பதில் கூறாமல் தவிர்த்துவருவது ஏன்?
இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் குறித்து அமெரிக்க நாடாளுமன்றத்தில் திறந்த புத்தகமாக விவாதம் நடந்தது. அணு ஆயுத பரவல், பேரழிவு ஆயுதங்கள், அணு ஆயுத சோதனைக் கட்டுப்பாடு, இந்தியா கடைபிடித்துவரும் அயலுறவு கொள்கை, அமெரிக்காவின் நலன் என்று பல அம்சங்கள் அந்நாட்டின் செனட்டிலும்,
காங்கிரஸிலும் விவாதிக்கப்பட்டது. அதன் அடிப்படையில்தான் ஹென்றி ஹைட் சட்ட வரைவு வடிவமைக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது. அப்போதும் பல உறுப்பினர்களின் வாதங்கள் திருத்தங்களாக எடுத்துக் கொள்ளப்பட்டு சட்ட வரைவில் சேர்க்கப்பட்ட பின்னரே அது நிறைவேற்றப்பட்டது.ஆனால், அப்படிப்பட்ட எந்த விவாதமாவது நமது நாட்டின் நாடாளுமன்றத்தில் நடந்ததா? மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெறவேண்டிய அவசியம் (அமெரிக்க அரசு நிர்வாகத்திற்கு உள்ளதுபோல) நமது அரசியல் சட்டத்தில் இல்லாமல் இருக்கலாம். ஆனால், நமது நாட்டின் (பிரதமர் மன்மோகன் சிங் கூறுவதுபோல) எரிசக்தி பாதுகாப்பை உறுதிசெய்யக்கூடிய ஒரு ஒப்பந்தம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதித்து அதன் மூலம் இந்நாட்டு மக்களுக்கு அதன் அவசியத்தை, உள்ளடக்கத்தை தெரிவிக்க வேண்டிய ஜனநாயக கடமை அரசிற்கு உண்டல்லவா?
அதனை செய்யத் தயங்குவது ஏன்? எல்லாம் முடிந்த பிறகு இறுதியாக நாடாளுமன்றத்தின் பார்வைக்கு வைக்கப்படும் என்று கூறி முதலில் செய்ய வேண்டியதை இறுதியில் செய்ய முயற்சிப்பது எதற்காக?
இந்த ஒப்பந்தம் எரிசக்திப் பாதுகாப்பை உறுதி செய்வதற்குத் தான் என்றால், அது தொடர்பான விவரங்களை வெளியிடாமல் இவ்வளவு ரகசியம் காப்பது ஏன்?
தங்கள் நலனிற்காக தாங்கள் தேர்ந்தெடுத்த அரசு எடுக்கும் ஒரு முக்கிய நடவடிக்கைத் தொடர்பான விவரங்களை மக்கள் தெரிந்துகொள்ள முடியாமல் ரகசியம் காப்பதும், அச்செயலை முடித்துவிட தீவிரம் காட்டுவதும், அதற்காக ஆட்சிக்கு ஏற்பட்ட ஆபத்தைத் தவிர்க்க வேறு ஆதரவை நாடிப் பெறுவதும் இந்திய ஜனநாயகம் இதுநாள்வரை காணாத வினோதங்கள்.
இது நல்லதும் அல்ல... நன்மையும் அல்ல.
Webdunia
Publish Date: Thu, 03 Jul 2008 (18:15 IST)
Updated Date: Thu, 03 Jul 2008 (18:14 IST)