Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கூச்சல் கூடாரமான நாடாளுமன்றம்!

கூச்சல் கூடாரமான நாடாளுமன்றம்!

Webdunia

நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் தொடர் முடிவதற்கு நிர்ணயிக்கப்பட்ட மே 22 ஆம் தேதிக்கு 5 நாட்கள் முன்னதாகவே முடித்துக்கொள்ளப்பட்டுள்ளது!

பிப்ரவரி 25 ஆம் தேதி துவங்கிய நிதிநிலை அறிக்கைக்கான இந்த நாடாளுமன்றக் கூட்டத் தொடரில், ரயில்வே நிதிநிலை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட அன்றும், 2 நாட்களுக்குப் பின்னர் பொது நிதிநிலை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட அன்றும் மட்டுமே அனைத்து உறுப்பினர்களும் அமைதியாக இருந்து அவை நடவடிக்கைகளில் கலந்துகொண்ட நாட்களாகும்.

மற்ற நாட்களில் அவை கூடியதும் ஏதாவது ஒரு கட்சியின் உறுப்பினர்கள் ஒட்டுமொத்தமாக எழுந்து ஒரு பிரச்சனையைக் கூறி கோஷமிடுவதும், கேள்வி நேரத்தை தள்ளிவைத்துவிட்டு தாங்கள் எழுப்பும் பிரச்சனையை விவாதிக்க வேண்டும் என்று முழக்கமிடுவதும், அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்று அவைத் தலைவர்கள் கூறுவதும், அவர் கூறியதை ஏற்றுக்கொள்ளாமல் கோரிக்கை விடுத்த உறுப்பினர்கள் அனைவரும் அவையின் மையப் பகுதிக்கு வந்து தொடர் முழக்கமிட்டு அவை நடவடிக்கைகளை இயங்கவிடாமல் செய்வதும், சில மணித் துளிகளுக்குப் பிறகு அவை நடவடிக்கைகளை ஒரு மணி நேரமோ, 2 மணி நேரமோ அவைத் தலைவர் தள்ளிவைப்பதும் அன்றாடக் காட்சிகளாகிவிட்டன.

இந்த நிதிநிலைக் கூட்டத் தொடரில் ரயில்வே நிதிநிலை அறிக்கை மட்டுமே பல்வேறு கட்சிகளின் உறுப்பினர்களால் நன்கு அலசப்பட்டு, விவாதிக்கப்பட்டு, அந்த விவாதங்களின் மீது ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் பதிலளிக்க நன்கு முடிந்தது.

ஆனால், பொது நிதிநிலை அறிக்கையின் மீது கிட்டத்தட்ட எந்த விவாதமும் நடைபெறவில்லை என்று கூறலாம். முக்கிய எதிர்க்கட்சியான பாரதிய ஜனதா கட்சியில் இருந்து, நமது மாநில எதிர்க்கட்சியான அ.இ.அ.தி.மு.க. வரை கேள்வி நேரத்தை ஒவ்வொரு நாளும் நடைபெறவிடாமல் தடுத்துக் கொண்டே இருந்தனர்.

ஆளும் கட்சிக் கூட்டணியில் உள்ள தி.மு.க.வில் இருந்து, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மேற்குவங்க, மராட்டிய உறுப்பினர்களும் தங்கள் பங்கிற்கு உள்ளூர் பிரச்சனையை பெரிதாக்கி நாடாளுமன்ற நடவடிக்கைகளை முடிந்தளவிற்கு முடக்கினர்.

இவர்கள் எழுப்பிய பிரச்சனைகள் அனைத்தும் உடனடி விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளத் தக்கவையா? என்று பார்த்தால் நிச்சயம் இல்லை என்றே கூறலாம்.

· முலாயம் சிங் அரசை மத்திய அரசு கவிழ்க்க திட்டமிடுகிறது என்று கூறி சமாஜ்வாடி உறுப்பினர்கள் முழக்கமிட, ஒரு நாள் முழுவதும் இரு அவைகளும் தள்ளிவைக்கப்பட்டன.

· நந்திகிராம், சிங்கூர் பிரச்சனையை பல நாட்களுக்கு எழுப்பி கேள்வி நேரத்தை நடைபெறவிடாமல் செய்தன பா.ஜ.க. கூட்டணிக் கட்சிகள்.

· மராட்டிய அரசு கோதாவரி மீது தடுப்பணை கட்டும் விவகாரத்தை ஆந்திராவைச் சேர்ந்த உறுப்பினர்கள் எழுப்ப, அதனை எதிர்த்து மராட்டிய மாநில உறுப்பினர்கள் குரல் கொடுக்க, அதனால் அவை நடவடிக்கைகள் முடக்கப்பட்டது.

· காவிரி நடுவர் மன்றம் இறுதித் தீர்ப்பு அளித்து, அந்த இறுதித் தீர்ப்பின் மீது 90 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் மறுபரிசீலனை மனு செய்யலாம் என்று கூறியிருந்த நிலையில், பா.ஜ.க.வை சேர்ந்த கர்நாடக உறுப்பினரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அனந்த்குமார் அவையில் அது குறித்து பேச, அதற்கு தமிழக உறுப்பினர்கள் எதிர்ப்பு காட்ட அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டது.

· காவிரி நதி நீர்ப் பிரச்சனையை பேசமாட்டேன் என்று கூறிவிட்டு, அப்பிரச்சனையை முன்னாள் பிரதமர் தேவே கௌடா பேச, அதனால் அவையில் கூச்சலும், குழப்பமும் ஏற்பட்டது.

· இதேபோல, முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்துவது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள நிலையில், அதைபற்றி கேரள உறுப்பினர்கள் பேச, அதற்கு தமிழக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவிக்க, தேவையில்லாமல் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டது.

· மதுரை தினகரன் அலுவலகம் தாக்கப்பட்ட சட்டம்-ஒழுங்கு பிரச்சனையை மாநிலங்களவையில் எழுப்பி அவை நடவடிக்கைகளை பாதித்தது அ.இ.அ.தி.மு.க..

· எல்லாவற்றிற்கும் மேலாக, சேது சமுத்திர திட்டத்திற்காக ராமேஸ்வரத்தை அடுத்த கடற்பகுதியில் கடலை ஆழப்படுத்தும் பணி நடந்து வரும் நிலையில், நாசா ஒரு படத்தை வெளியிட, அந்தப் படத்தில் தனுஷ்கோடியையும், தலைமன்னாரையும் இணைக்கும் நிலத்திட்டு காணப்பட, அதுதான் ராமர் பாலம் என்றும், அதனை இடிக்கக்கூடாது என்றும் கூறி பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகள் பிரச்சனையை உருவாக்கி
அமளியில் ஈடுபட்டதன் காரணமாக கடந்த ஒரு வார காலமாக மக்களவை, மாநிலங்களவை நடவடிக்கைகள் பல முறை பாதிப்பிற்குள்ளானது.

ஒவ்வொரு நாளும் இப்படி ஏதாவது ஒரு பிரச்சனையை, ஏதாவது கட்சி எழுப்பி நாடாளுமன்ற நடவடிக்கைகளை முடக்கும் நிலை தொடர்ந்ததால் வெறுப்புற்ற மாநிலங்களவைத் தலைவரும், குடியரசு துணைத் தலைவருமான பைரோன் சிங் ஷெகாவத்தும், மக்களவைத் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜியும் நாடாளுமன்றத் தொடரை முன்கூட்டியே முடித்துக்கொள்ள முடிவு செய்து அவ்வாறே முடித்தும்
விட்டனர்.

சுனாமி, பெரும் வெள்ளப் பெருக்கு போன்றவற்றால் உயிரிழப்புகளும், கடும் அழிவும் ஏற்படும் போது அது குறித்து மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து கேட்டு விவாதம் செய்வதற்காக கேள்வி நேரத்தை தள்ளிவைக்கும் தீர்மானத்தைக் கொண்டுவந்து விவாதிப்பது நாடாளுமன்ற ஜனநாயகத்தில் ஒப்புக்கொள்ளப்பட்ட வழிமுறைதான். ஆனால், மேல் குறிப்பிடப்பட்ட எந்தப் பிரச்சனையாவது அப்படிப்பட்ட விவாதத்திற்கு தகுதியுடையதுதானா என்பதை சீர்தூக்கிப் பார்க்க வேண்டும்.

இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் இப்படி அவையில் விவாதிக்கப்படுவதற்கு தகுதியற்ற இத்தனைப் பிரச்சனைகள் ஒரே கூட்டத் தொடரில் எப்பொதுதாவது எழுப்பப்பட்டிருக்குமா என்பது சந்தேகமே?

பொது நிதிநிலை அறிக்கையில் மக்களைப் பாதித்த அம்சங்கள் ஏராளமாக இருந்தன. ஆனால், அவைகள் குறித்து விவாதிக்க வேண்டிய உறுப்பினர்கள், தங்களைத் தேர்ந்தெடுத்த மக்களின் பிரச்சனைகளை மறந்துவிட்டு, தங்களின் கட்சி அரசியலை முன்னிலைப்படுத்தி நடந்துகொண்டதன் காரணமாக ஒரு கூச்சல் கூடாரமாகவே நாடாளுமன்றம் மாறிவிட்டது.

இப்படிப்பட்ட நிலை வெட்கப்படக்கூடியது, வேதனையானது. பிரச்சனைகளை உறுப்பினர்கள் நன்கு ஆராய்ந்து பேசும்போதுதான், அவைகளின் தன்மைகளை மக்கள் நன்கு புரிந்துகொள்ள முடிந்தது. ஆனால், ஒவ்வொரு நாளும் பல சட்ட முன்வரைவுகள் விவாதமின்றியே நிறைவேற்றப்பட்டதனால் மக்களின் கவனத்திற்கு அதன் விவரங்கள் கொண்டுவரப்படாமலேயே பல சட்டங்கள் நடைமுறைக்கு வரப்போகும் அபாயமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

2005 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் எதிர்க்கட்சிகள் நடத்திய அமளியால் பல நாட்கள் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்ட போது மிகவும் நொந்துபோன அவைத் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜி, "நாடாளுமன்ற ஜனநாயகத்தில் இது ஒரு கறுப்பு நாள். நமது ஜனநாயகம் ஒரு சவாலிற்கு உட்படுத்தப்பட்டுள்ளது. நாடாளுமன்ற ஜனநாயகத்தை சிதைத்து அழிக்கும் முயற்சியை தடுத்து நிறுத்துங்கள் என்று நான்
அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்" என்று கூறினார்.

அவர் கூறி இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்டன. ஆனால், நிலைமை மோசமடைந்துள்ளதே தவிர, முன்னேற்றம் ஏதுமில்லை. இந்த நிலை தொடர்ந்தால், நாடாளுமன்றம் என்பது குழந்தைகள் கூட எள்ளி நகையாடும் காட்சிப் பொருளாகும் அவல நிலை ஏற்படும்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களுடைய ஜனநாயக கடமையை அவை விதிகளுக்கு உட்பட்டு செம்மையாக நிறைவேற்ற முன்வரவேண்டும். அவ்வாறு செய்யாமல் தங்களுடைய கட்சி மற்றும் அரசியல் தேவைகளுக்காக நாடாளுமன்றத்தை நாடகமன்றமாக தொடர்ந்து பயன்படுத்தினால், அது இந்திய ஜனநாயகத்தையே கேள்விக்குறியாக்கிவிடும்.

Share this Story:

Follow Webdunia tamil