கங்கோத்ரி பனிமலையில் ஒன்றரை கிலோ மீட்டருக்கு பனி குறைந்துள்ளது
Publish Date: Sat, 05 Dec 2009 (20:18 IST)
Updated Date: Sat, 05 Dec 2009 (20:17 IST)
திங்களன்று டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகனில் முக்கியமான வானிலை மாற்ற உலக மாநாடு துவங்கவுள்ள நிலையில் கங்கை நதிக்கு தண்ணீர் வழங்கிக் கொண்டிருக்கும் கங்கோத்ரி பனிமலைப் பகுதியில் சுமார் 1.5 கி.மீ. அளவுக்கு பனி அளவு குறைந்திருப்பதாக இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) தெரிவித்துள்ளது.அதாவது கடந்த 30 ஆண்டுகளில் இந்த அளவு பனிப்பரப்பு குறைந்துள்ளது என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.கடந்த 10 ஆண்டுகளில் 15 முதல் 20 மீட்டர்கள் வரை கங்கோத்ரியில் பனி அளவு குறைந்துள்ளது. ஆனால் கங்கோத்ரியில் சமீபமாக பனி வற்றுவது சற்றே குறைந்திருப்பதாக வந்துள்ள தகவல் சற்றே ஆறுதல் அளிப்பதாயுள்ளது.இருப்பினும் இந்த பனிமலையின் எதிர்காலம் கவலைக்கிடமாகியுள்ளது. ஏனெனில் மலையின் சில உச்சி இடங்களில் சில வகை செடி கொடிகளும், மரங்களுமே வளரத் துவங்கியுள்ளதாக செயற்கைக்கோள் படம் தெரிவிப்பதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.நேற்று நேபாள பிரதமர் உட்பட அந்த நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் எவெரெஸ்டையும் அதனை நம்பி வாழும் 100 கோடி மக்களையும் பாதுகாக்கும் நோக்கத்துடன் எவெரெஸ்ட் சிகரத்தின் அடிவாரத்தில் கூட்டம் ஒன்றை நடத்தினர்.ஆனால் நமது சுற்றுச்சூழல் அமைச்சருக்கோ பனிமலை உருகுதல் வானிலை மாற்றங்களினால் அல்ல. அந்த ரீதியில்தான் அவர் பேசி வருகிறார். இது விஞ்ஞானிகளிடையே பெரும் எதிர்ப்பையும் சர்ச்சையையும் கிளப்பியுள்ளது.புவி வெப்பமடைதல் காரணம் மட்டுமல்லாது, வேறுபல காரணங்களும் உள்ளன என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். ஆனால் அந்த வேறுபல காரணங்கள் ஏன் இத்தனை நாள் கண்களுக்கு புலப்படவில்லை என்பதையோ, புவி வெப்பமடைதல் காலக்கட்டம் பற்றி பெருமளவு விஞ்ஞான சொல்லாடல்கள் கிளம்பியதும் ஏன் பிற காரணங்கள் தெரியவருகின்றன என்பதையோ அரசுகளும் விஞ்ஞானிகளும் விளக்குவதில்லை.