Publish Date: Fri, 11 Apr 2008 (12:37 IST)
Updated Date: Fri, 11 Apr 2008 (12:36 IST)
வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் இன்று காலை இந்திய ரூபாய்க்கு நிகரான டாலரின் மதிப்பு 3 பைசா குறைந்தது.
இன்று காலையில் வர்த்தகம் நடக்கும் போது 1 டாலர் மதிப்பு ரூ.39.91/39.92 என்ற அளவில் இருந்தது. நேற்றைய இறுதி நிலவரம் 1 டாலர் ரூ.39.94/39.95.
பிரதமர் மன்மோகன் சிங் நேற்று ஒரு விழாவில் பேசும் போது, அதிகரித்து வரும் விலை உயர்வால், பணவீக்கம் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு அதிகரித்து வருகிறது. இதனால் பொருளாதார சீர்திருத்தத்தின் பலன்கள் கிடைக்கவில்லை. அத்துடன் விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்தால் விரும்பத்தகாத விளைவுகள் ஏற்படும் என்று கூறியிருந்தார்.
அத்துடன் இன்று மத்திய அரசு வெளியிட்டுள்ள அதிகாரபூர்வ புள்ளி விபரப்படி பணவீக்கம் 7.41 விழுக்காடாக அதிகரித்துள்ளது.
மற்ற நாடுகளின் அந்நியச் செலாவணி சந்தையில் டாலரின் மதிப்பு குறைந்தது. இவை போன்ற காரணங்களினால் இந்திய ரூபாய்க்கு நிகரான டாலரின் மதிப்பு குறைந்ததாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.