Publish Date: Fri, 14 Mar 2008 (12:37 IST)
Updated Date: Fri, 14 Mar 2008 (12:37 IST)
டாலருக்கு நிகராக இந்திய ரூபாய் மதிப்பு உயர்வால் லாபகரமாக ஏற்றுமதி செய்ய முடியாமல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என ஏற்றுமதியாளர் சம்மேளன தலைவர் கணேஷ்குமார் ஆதங்கப்பட்டுள்ளார்.
ஈரோடு அடுத்துள்ள குமாராபாளையத்தில் நடந்த ஒரு கல்லுõரி விழாவில் பங்கேற்க வந்த டில்லி இந்திய ஏற்றுமதியாளர் சம்மேளன தலைவர் கணேஷ்குமார் கூறியது:
ஏற்றுமதியாளர்கள் சுமை தூக்குபவர்களாகத்தான் உள்ளனர். அவர்களால் ஏற்றுமதியை லாபகரமாக செய்ய முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். டாலருக்கு நிகராக இந்திய ரூபாய் மதிப்பு உயர்ந்து விட்டதே இதற்கு காரணமாகும். அன்னிய செலவாணியை பெருக்கும் ஏற்றுமதியாளர்களை மத்திய அரசு கருத்தில் கொள்ள வேண்டியது அவசியம். தற்போது அறிவித்த மத்திய பட்ஜெட்டில் ஏற்றுமதியாளர்களுக்கு எந்த விதமான சலுகைகளும் அறிவிக்கப்படவில்லை. இது அதிக ஏமாற்றத்தை தந்துள்ளது.
மத்திய நிதியமைச்சர் ஏற்றுமதியாளர்களுக்கு ரூபாய் எட்டாயிரம் கோடி ஒதுக்கி அறிவித்துள்ளார். இது நாங்கள் வரியாக கட்டிய பணம். இதில் ஏற்றுமதியாளர்களுக்கென தனியாக அரசு அறிவித்துள்ளது சுமார் ரூ.400 கோடி மட்டுமே. இந்த நிதியால் ஏற்றுமதியாளர்களுக்கு எந்த வித பயனும் ஏற்படாது. ஏப்ரல் மாதம் அறிவிக்கப்படவுள்ள புதிய தொழிற் கொள்கையில் ஏற்றுமதியாளர்களுக்கென மத்திய தொழில்துறை அமைச்சர் கமல்நாத் நல்ல அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்ப்பார்த்திருக்கிறோம்.
அவர் சிறந்த தொழில்கொள்கையை அறிவிக்க வேண்டும். இந்திய ஏற்றுமதியாளர்களின் வர்த்தகத்தை பெருக்க இது உதவும். இவ்வாறு அவர் கூறினார்.