ஆசியாவிலேயே மற்ற நாடுகளை விட, இந்தியாவின் சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் எதிர்காலத்தில் வளர்ச்சிக்கான வாய்ப்பு இருப்பதாக உறுதியுடன் உள்ளன.
ஹெச்.எஸ்.பி.சி. வங்கி (ஹாங்காங் சாங்காய் பேங்கிங் கார்ப்பரேஷன்) ஆசியா மற்றும் பசிபிக் பிராந்திய நாடுகளில் உள்ள சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் எதிர்கால வளர்ச்சி பற்றி என்ன கருதுகின்றன என்ற ஆய்வு நடத்தியுள்ளது.
இந்த ஆய்வின் விபரங்கள் இன்று சென்னையில் வெளியிடப்பட்டது.
இதை இந்த வங்கியின் சிறு, நடுத்தர நிறுவனங்களின் பிரிவு தலைவர் புவனேஷ் கன்னா வெளியிட்டார்.
அப்போது அவர் கூறியதாவது:
இந்த ஆய்வை டி.என்.எஸ். என்ற சந்தை ஆய்வு நிறுவனம் நடத்தியது. இதில் இந்தியா உட்பட ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் உள்ள ஒன்பது நாடுகளில் உள்ள நிறுவனங்களிடம் நடத்தப்பட்டது.
அடுத்த ஆறு மாதங்களில் உள்நாட்டு பொருளாதார வளர்ச்சியை பற்றிய கணிப்பு என்ன, நீங்கள் மேலும் முதலீடு செய்வீர்களா அல்லது முதலீட்டை குறைப்பீர்களா, வேலை செய்யும் ஊழியர்களை அதிகப்படுத்துவீர்களா அல்லது குறைப்பீர்களா, சீனாவுடனான வர்த்தகம், மற்ற ஆசிய நாடுகளுடனான வர்த்தகம், பிற நாடுகளுடனான வர்த்தகம் அதிகரிக்குமா அல்லது குறையுமா என்பது போன்ற கேள்விகள் கேட்கப்பட்டன.
இதிலிருந்து வியட்நாம் நாட்டை சேர்ந்த தொழில் நிறுவனங்கள் எதிர்காலத்தில் வளர்ச்சி இருக்கும் என்று பலமாக நம்பிக்கை தெரிவித்துள்ளன. அதற்கு அடுத்தபடியாக இந்தியாவைச் சேர்ந்த நிறுவனங்கள் எதிர்காலத்தில் வளர்ச்சி இருக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளன.
இந்தியாவைச் சேர்ந்த பெரும்பான்மை நிறுவனங்கள் (58 விழுக்காடு) உள்நாட்டு பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும் என்று தெரிவித்துள்ளன.
38 விழுக்காடு நிறுவனங்கள் பொருளாதார வளர்ச்சி இதே அளவு இருக்கும் என்றும், நான்கு விழுக்காடு நிறுவனங்கள் பொருளாதார வளர்ச்சி குறையும் என்று தெரிவித்துள்ளன.
இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் இந்தியா, சீனா ஆகிய இரண்டு நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் முதலீடுகளை அதிகரிக்க உள்ளதாக தெரிவித்துள்ளன.
இந்தியாவில் சென்னை, மும்பை, டில்லி, கல்கத்தா ஆகிய நகரங்களைச் சேர்ந்த 333 தொழில் நிறுவனங்களிடம் ஆய்வு செய்யப்பட்டது.
இதில் 68 விழுக்காடு நிறுவனங்கள் முதலீட்டை அதிகரிக்க போவதாக தெரிவித்துள்ளன.
38 விழுக்காடு நிறுவனங்கள் முதலீட்டை அதிகரிக்கவோ அல்லது குறைக்கவோ போவதில்லை என்று தெரிவித்துள்ளன. இரண்டு விழுக்காடு நிறுவனங்கள் மட்டும் குறைக்க போவதாக கூறியுள்ளன.
ஊழியர்களை பொறுத்தவரை, 57 விழுக்காடு நிறுவனங்கள் புதிதாக வேலைக்கு ஊழியர்களை எடுக்கப் போவதில்லை என கூறியுள்ளன.
43 விழுக்காடு நிறுவனங்கள் புதிதாக ஊழியர்களை பணியில் அமர்த்தப் போவதாக தெரிவித்துள்ளன. எந்த நிறுவனமும் ஊழியர்களை வேலையை விட்டு நீக்குவதாகத் தெரிவிக்கவில்லை.
இந்திய சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மிக குறைந்த அளவே, மற்ற நாடுகளுடன் வர்த்தகம் செய்கின்றன. இந்த வருடம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கின்றன.
இந்தியா, வியட்நாமை சேர்ந்த நிறுவனங்கள், சீனா உட்பட மற்ற ஆசிய நாடுகளுடன் வர்த்தகம் அதிகரிக்கும் என்று அதிகளவு நம்பிக்கையில் உள்ளன.
இந்தியாவைச் சேர்ந்த 60 விழுக்காடு நிறுவனங்கள் சீனாவுடன் வர்த்தகம் அதிகரிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளன.
இப்போது உள்ள அளவிலேயே இருக்கும் என்று 30 விழுக்காடு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. பத்து விழுக்காடு நிறுவனங்கள் மட்டுமே குறையும் என கூறியுள்ளன.
மற்ற நாடுகளுடனான வர்த்தகம் அதிகரிக்கும் என்று 70 விழுக்காடு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இப்போதுள்ள நிலையே தொடரும் என்று முப்பது விழுக்காடு நிறுவனங்கள் கூறியுள்ளன.