சிமெண்ட் உற்பத்தி திறனை அதிகரிக்க ரூ.3,500 கோடி கூடுதல் முதலீடு செய்ய திட்டமிட்டு உள்ளதாகவும், அரியலூர் தொழிற்சாலையில் சந்தை விற்பனைக்கான சிமெண்ட் உற்பத்தி அடுத்த ஆண்டு தொடங்க உள்ளதாகவும் டால்மியா சிமெண்ட்(பாரத்) நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் டி.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் உள்ள டால்மியா சிமெண்ட் நிறுவனத்துக்கு சொந்தமான தொழிற்சாலைகளின் உற்பத்தி திறனை அதிகரிக்க ஏற்கெனவே ரூ.1,500 கோடி முதலீடு செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது என்றும், தற்போது ரூ.3,500 கோடியை கூடுதலாக முதலீடு செய்வதன் மூலம் சிமெண்ட் உற்பத்தி, தற்போதைய உற்பத்தி அளவான 60 லட்சம் டன்னிலிருந்து 1 கோடியே 40 லட்சம் டன்னாக அதிகரிக்கும் என்றும் வெங்கடேசன் தெரிவித்தார்.
இந்த விரிவாக்க பணிகள் முடிந்துவுங்ன, அடுத்த நிதியாண்டின் இறுதியில் டால்மியாபுரம் உற்பத்தி நிலையத்தில் தற்போது உள்ள 35 லட்சம் டன் சிமெண்ட உற்பத்தியானது 45 லட்சம் டன்களாக உயரும் எனவும், ஒரிசா மாநிலத்தில் உள்ள தொழிற்சாலையின் உற்பத்தி திறன் 20 லட்சம் டன்னில் இருந்து 55 லட்சம் டன்களாக அதிகரிக்கும் என்றும் வெங்கடேசன் கூறினார்.
ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டத்தில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள ஆலையின் உற்பத்தி இந்த ஆண்டு செப்டம்பர் மாதமும், அரியலூர் சிமெண்ட் ஆலையின் உற்பத்தி அடுத்த ஆண்டும் துவங்கும் என்று தெரிவித்த வெங்கடேசன், கர்நாடகம், இராஜஸ்தான், மேகாலயா ஆகிய மாநிலங்களிலும் புதிய சிமெண்ட் ஆலைகளை அமைக்க தங்கள் திட்டமிட்டு வருவதாகவும் கூறினார்.