Publish Date: Thu, 31 Jan 2008 (17:30 IST)
Updated Date: Thu, 31 Jan 2008 (17:29 IST)
மாருதி சுசூகி நிறுவனம் கார்களின் விலையை ரூ.2 ஆயிரம் முதல் ரூ.12 ஆயிரம் வரை அதிகரிக்க உள்ளது.
இந்தியாவில் கார் விற்பனையின் முன்னணி நிறுவனமாக உள்ளது மாருதி சுசூகி. இது பல அந்நிய நாட்டு மற்றும் உள்நாட்டு கார் நிறுவனங்களின் பலத்த போட்டிகளுக்கு இடையே தனது இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது. இது போட்டியை சமாளிக்க கடந்த வருடம் 5 வகை புதிய கார்களை அறிமுகப்படுத்தியது.
இந்தியாவில் விற்பனையாகும் கார்களில் 50 விழுக்காடு மாருதி நிறுவனத்தின் தயாரிப்பே. இப்போது கார்களின் விலையை ரூ.2,000 இல் இருந்து ரூ.12 ஆயிரம் வரை மாடலுக்கு தகுந்தாற்போல் அதிகப்படுத்த உள்ளது.
கார் தயாரிக்க தேவைப்படும் பாகங்களின் விலை, மூலப் பொருட்களின் விலை ஏற்றத்தினால், நிறுவனத்தின் இலாபம் குறைகின்றது. இதை ஈடு செய்யவே விலை உயர்த்த உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மாருதி நிறுவனத்தை தொடர்ந்து மற்ற நிறுவனங்களும் கார் விலையை உயர்த்துமா என்பது அடுத்த சில தினங்களில் தெரிந்து விடும்.