Publish Date: Wed, 09 Jan 2008 (16:29 IST)
Updated Date: Wed, 09 Jan 2008 (16:29 IST)
சீன தையல் இயந்திரங்கள் வர்த்தக கண்காட்சி நாளை பெங்களூரில் தொடங்குகிறது. இந்த கண்காட்சி நாளை முதல் மூன்று நாட்கள் நடைபெறும்.
இந்த கண்காட்சியை இந்திய ஆயத்த ஆடை உற்பத்தியாளர் சங்கமும், சீனா தையல் இயந்திரங்கள் உற்பத்தியாளர் சங்கமும் இணைந்து நடத்துகின்றன.
இந்த வர்த்தக கண்காட்சி பற்றி இந்திய ஆயத்த ஆடை உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் ராகுல் மேத்தா கூறியதாவது:
இந்தியாவில் முதன் முறையாக சீனாவைச் சேர்நத் தையல் இயந்திர தயாரிப்பாளர்கள் கண்காட்சி நடத்துகின்றனர். இதில் நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய தையல் இயந்திரங்கள் இடம் பெறும். இவற்றின் விலையும் மலிவாக இருக்கும்.
இதில் ஜவுளித் துறைக்கு தேவையான குறிப்பாக ஆயத்த ஆடை தயாரிப்புக்கு தேவையான தையல் இயந்திரங்கள், கட்டிங், கேட் காம், லேஸ், பட்டன் தைக்கும் இயந்திரம் ஆகியவை இடம் பெறும். இத்துடன் எம்ப்ராய்டரிக்கு தேவையான மென்பொருள், பேட்டர்ன் மேக்கிங் இயந்திரம் ஆகியவையும் இடம் பெறும்.
சர்வதேச அளவில் தையல் இயந்திரங்கள் உற்பத்தியில் சீனா முதலிடம் வகிக்கிறது. உலகத்தில் உற்பத்தியாகும் தையல் இயந்திரங்களில் 70 விழுக்காடு சீன தயாரிப்புக்கள் தான். சீன தையல் இயந்திர தாயாரிப்பு நிறுவனங்கள், அவர்கள் தயாரிக்கும் இயந்திரங்களை அந்நிய நாடுகளில் விற்பனை செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளன. அதே நேரத்தில் சர்வதேச அளவில் ஆயத்த ஆடை தயாரிப்பில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. இதனால் தான் சீன நிறுவனங்கள் இந்தியாவிற்கு முக்கியத்துவம் கொடுக்கின்றன என்று கூறினார்.