Publish Date: Mon, 10 Dec 2007 (12:42 IST)
Updated Date: Mon, 10 Dec 2007 (12:42 IST)
தென் இந்திய துறைமுகங்களில் பாமாயில் இறக்குமதி செய்ய தடை விதிப்பது சாத்தியமற்றது. இதனால் பாமாயிலை பயன்படுத்துபவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று மத்திய வர்த்தக இணை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கூறினார்.
கொச்சியில் செய்தியாளர்களிடம் பேசும் போது ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது:
இதர மாநிலத்தில் உள்ள மக்கள் சமையல் எண்ணெய் ஆக பாமாயில் விரும்பிப் பயன்படுத்துகின்றனர். இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் பாமாயிலில் 50 விழுக்காட்டிற்கு மேல் தென் இந்திய துறைமுகங்களில் இறக்குமதி செய்யப்படுகிறது.
கேரள மாநில அரசு கேட்டுக் கொண்டதால் மத்திய அரசு கொச்சி துறைமுகத்தில் பாமாயில் இறக்குமதி செய்ய தடை விதித்தது. பேபூர் துறைமுகத்தில் தடை விதிப்பதற்கும் ஆலோசித்து வருகிறது.
பாமாயிலை இறக்குமதி செய்வதால், கேரளாவில் பாராம்பரியமான தென்னை விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படுமா என்பதை அரசு மிக உன்னிப்பாக கவனித்து வருகிறது. உள்நாட்டு சமையல் எண்ணெய் தேவை அதிகரித்து வருகிறது. இதற்கு தகுந்தாற்போல் சமையல் எண்ணெய் கிடைக்க வேண்டும். சமையல் எண்ணெய் தட்டுப்பாடு இல்லால் கிடைக்க பாமாயில் இறக்குமதி செய்வது தவிர்க்க முடியாதது.
ஆசியன் அமைப்புடன் தாராள வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட்டாலும், பாமயில் மீதான இறக்குமதி வரி 50 விழுக்காடுக்கும் குறையாமல் மத்திய அரசு பார்த்துக் கொள்ளும் என்று ஜெய்ராம் ரமேஷ் கூறினார்.