Publish Date: Wed, 21 Nov 2007 (18:54 IST)
Updated Date: Wed, 21 Nov 2007 (18:50 IST)
இந்தியாவில் இருந்து கோழி, முட்டை உள்ளிட்டவற்றை இறக்குமதி செய்ய விதித்திருந்த தடையை ஓமன் அரசு நீக்கியுள்ளது என்று மஸ்கட்டில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
பறவைக் காய்ச்சல் நோய் தாக்கத்தில் இருந்து இந்தியா முற்றிலும் விடுபட்டுள்ளதாக சர்வதேச விலங்கினங்களுக்கான சுகாதார அமைப்பு விடுத்த அறிக்கையில் கூறியுள்ளதையடுத்து ஓமன் அரசு இம்முடிவை எடுத்துள்ளது.
கடந்த ஜீலை மாதம் இந்தியாவின் வடகிழக்கு மாநிலம் ஒன்றில் உள்ள கோழிப் பண்ணையில் பறவைக் காய்ச்சல் நோய் அரசின் நடவடிக்கையால் முற்றிலும் ஒழிக்கப் பட்டுள்ளதாக சர்வதேச விலங்கினங்களுக்கான சுகாதார அமைப்பு அறிவித்திருந்தது.
இதனைத் தொடர்ந்து திங்கட்கிழமை ஓமன் வேளாண்துறை அமைச்சர் ஷேக்சலீம் பின் ஹூலால் அல்- காலியை சந்தித்து பேசிய ஓமனுக்கான இந்தியத் தூதர் அனில் வாத்வா, சர்வதேச விலங்கினங்களுக்கான சுகாதார அமைப்பின் முடிவை அவரிடம் கூறினார். அதனையடுத்து இந்தியாவில் இருந்து கோழி, முட்டை உள்ளிட்டவைகளை இறக்குமதி செய்ய விதித்திருந்த தடையை ஓமன் அரசு நீக்கியுள்ளது.
இதனால் உள்நாட்டில் கோழி, முட்டை விலை உயரும் நிலை உருவாகியுள்ளது.