பங்குச் சந்தையி்ல் இன்றும் குறியீட்டு எண்கள் சரிந்தன. மும்பை சென்செக்ஸ் நேற்றைய இறுதி நிலவரத்தை விட இன்று 438.41 புள்ளிகள் சரிந்தன.
தேசிய பஙகுச் சந்தை குறியீட்டு எண் நிப்டி 135 புள்ளிகள் குறைந்தது.
இன்று காலையில் வர்த்தகம் தொடங்கிய போது, சென்செக்ஸ் குறியீட்டு எண் 18,031.77 புள்ளிகளில் தொடங்கியது. முதல் அரை மணி நேரத்தில் பங்குகளின் விலைகள் அதிகரித்ததால் சிறிது சென்செக்ஸ் அதிகரித்தது. இன்று காலையிலும், உணவு இடைவேளைக்கு பிறகும் பங்குகளின் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது.
இறுதியில் 438.41 புள்ளிகள் சரிந்து 17,559.98 புள்ளிகளில் முடிந்தது. நேற்றைய இறுதி நிலவரம் 17,998.39. கடந்த இரண்டு நாட்களில் சென்செக்ஸ் 1,155.87 புள்ளிகள் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதே போல் தேசிய பங்குச் சந்தையின் நிப்டி 135 புள்ளிகள் சரிந்து 5,215.30 புள்ளிகளில் முடிந்தது. தேசிய பங்குச் சந்தையிலும் பங்குகளின் விலைகள் ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது.
கடந்த இரண்டு நாட்களில் தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 343 புள்ளிகள் குறைந்தன.
பங்குச் சந்தை கட்டுப்பாட்டு வாரியம் செபி, அந்நிய முதலீட்டு நிறுவனங்களுக்கு சில கட்டுப்பாடுகளை விதிக்க போவதாக செவ்வாய் கிழமை அறிவித்தது. புதன் கிழமை முதல் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் தொடர்ந்து பங்குகளை விற்று வருகின்றன. இதனால் தான் குறியீட்டு எண் சரிகின்றது என்று புரோக்கர்கள் தெரிவித்தனர்.
மும்பை பங்குச் சந்தையிலும், தேசிய பங்குச் சந்தையிலும் எல்லா பிரிவு பங்குகளின் விலைகளும் குறைந்தன். அதனால் இவைகளின் குறியீட்டு புள்ளிகளும் குறைந்தன.
திங்கட்கிழமை பங்குச் சந்தை வர்த்தகம் தொடங்கும் போது நிலைமை சீரடையுமா அல்லது சரிவு தொடர்கதையாகுமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.