Publish Date: Sat, 13 Oct 2007 (16:48 IST)
Updated Date: Sat, 13 Oct 2007 (16:48 IST)
பொதுத்துறை நிறுவனமான பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் சென்ற நிதியாண்டிற்கு (2006-07 ) 180 விழுக்காடு பங்கு ஈவுத் தொகையை அறிவித்துள்ளது.
பாதுகாப்புத் துறையை சேர்ந்த பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட், நவரத்னா அந்தஸ்து வழங்கப்பட்டுள்ள நிறுவனமாகும். இது கடந்த 53 வருடங்களில் இல்லாத அளவில், சென்ற நிதியாண்டிற்கு 180 விழுக்காடு பங்கு ஈவு தொகையை அறிவித்துள்ளது.
இதன் சேர்மன் வி.வி.ஆர்.சாஸ்திரி செய்தியாளர்களிடம் கூறுகையில், சென்ற ஆண்டு வர்த்தகம் ரூ.3952.69 கோடியாக உள்ளது. இது அதற்கு முந்தைய ஆண்டை விட 12 விழுக்காடு அதிகம். வரிக்கு முந்தைய இலாபம் ரூ.1052.47 கோடி. (சென்ற வருடம் 855.26 கோடி) . வரிக்கு பிந்தைய இலாபம் ரூ.718.16 கோடி (சென்ற வருடம் 583.01 கோடி). பிப்ரவரி மாதத்தில் இடைக்கால ஈவுத்தொகையாக 40 விழுக்காடு வழங்கியுள்ளோம் என்று கூறினார்.
பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் பாதுகாப்புத் துறைக்கு தேவையான சாதனங்களை தயாரித்து வழங்குவதற்காக 1954 ஆம் ஆண்டில் பெங்களூரில் நிறுப்பட்டது. இது இந்தியாவிலும், அயல்நாடுகளிலும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு தேவையான பல்வேறு மின்னணு சாதனங்களை தயாரித்து வழங்கி வருகிறது.