இந்தியாவில் சில்லரை வணிகத்தில், அந்நிய நேரடி முதலீடு விரைவில் அனுமதிக்கப்படும் என்று அமெரிக்காவில் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்தார்.
அமெரிக்கா சென்றுள்ள நிதி அமைச்சர் சிதம்பரம் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள வார்ட்டன் கல்லூரி மாணவர்களிடையே கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
அப்போது சிதம்பரம், இந்தியாவில் சில்லறை வணிகத்தில் அந்நிய நேரடி முதலீட்டிற்கு விரைவில் அனுமதி வழங்கப்படும்.
இந்தியாவின் சில்லறை வணிகச் சந்தையில் வருடத்திற்கு ரூ. 13 இலட்சத்து 20 ஆயிரம் கோடிக்கு வர்த்தகம் நடக்கின்றது. இதில் நெளிநாட்டு மூதலீட்டாளர்கள் நேரடியாக ஈடுபடுவதற்கு, இந்திய சில்லறை வணிகர்கள் எதிப்பு தெரிவிக்கின்றனர்.
சில்லரை வணிகத்தில், அந்நிய நேரடி முதலீடு வந்தால், தங்களது வாழ்வாதாரமே நிலைகுலைந்து போய்விடும் என்று சிறு வியாபாரிகள் அஞ்சுகின்றனர். இந்த அச்சம் தேவையற்றது. இது பற்றி சில்லரை வணிகர்களிடம் விளக்கி புரியவைப்போம்.
அதன் பிறகு, சில்லரை வணிகத்தில் அந்நிய நேரடி மூதலீட்டை அனுமதி வழங்குவதற்கான கொள்கையில் தேவையான மாற்றம் செய்யப்படும். பெரிய நிறுவனங்கள் சில்லரை வணிகத்தில் ஈடுபடுவதால், சில்லரை வணிகர்கள் பாதிக்கப்படமாட்டார்கள். இது அனுபவ ரீதியாக பார்த்து அறிந்த உண்மை.
சிறு வணிகர்கள், சூழ்நிலைக்கு ஏற்ப, தங்கள் உத்திகளை மாற்றிக் கொண்டால், அவர்களாலும் போட்டியிட முடியும். எனினும் சிறு வணிகத்துறையில் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிப்பதற்கு, சிறிது காலம் ஆகும்.
இந்தியாவில் அந்நிய நேரடி மூதலீட்டை அனுமதிப்பதில், அரசியல் ரீதியாக எதிர்ப்பு இருப்பதை அனைவரும் அறிவார்கள். இந்நிலையில் சில்லறை வணிகத்தில் உள்நாட்டைச் சேர்ந்த பெரிய நிறுவனங்கள் நுழைவதற்கு கூட, சிறு வணிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் என்று சிதம்பரம் கூறினார்.
சில தினங்களுக்கு மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் கமல்நாத், சில்லறை வணிகத்துறையில் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிப்பதில் பிரச்சனை இல்லை. ஆனால் பெரிய நிறுவனங்களை எதிர்கொண்டு, சிறு வியாபாரிகள் தாக்குபிடித்து சமாளிக்க முடியுமா என்பதே பிரச்சனை. இதில் உள்ள சிக்கல்களை ஆராயும்படி, ஒரு பொருளாதார ஆய்வு நிறுவனத்திடம் கூறப்பட்டுள்ளது. இதன் அறிக்கை ஒரு சில மாதங்களில் கிடைக்கும் என்று கூறியிருந்தார்.
மற்றொரு புறம், உத்திரபிரதேசத்தில் ரிலையன்ஸ் நிறுவனம் சூப்பர் மார்க்கெட்டுகளை அமைக்க கொடுத்து இருந்த அனுமதியை சமீபத்தில் முதல்வர் மாயாவதி ரத்து செய்தார்.
சில்லரை வணிகத்தில் இந்தியாவைச் சேர்ந்த பெரிய நிறுவனங்கள் ஈடுபடுவதை எதிர்த்து, நாடு முழுவதும் ஆங்காங்கே சில்லரை வணிகர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் ஜெய்ப்பூரில் கூடிய அகில பாரதீய வைசியா மகாசம்மேளனன், என்ற வைசியர்கள் சமூகத்தினரின் தேசிய அளவிலான கூட்டமைப்பு ( வட இந்தியாவில் இந்த சமூகத்தைச் சேர்ந்தவர்களே அதிகளவில் சில்லறை வணிகத்தில் ஈடுபட்டுள்ளனர் ) சில்லரை வணிகத்தில் ரீலையன்ஸ், டாடா குழுமம் போன்ற பெரிய நிறுவனங்கள் ஈடுபடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
சில்லரை வணிகர்களை பாதிக்கும் இத்தகைய போக்கைக் கண்டித்து போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளது.
இந்த கூட்டமைப்பின் தலைவரும், பாரதீய ஜனதா கட்சிவைச் சேர்ந்த மக்களவை உறுப்பினருமான, ராம்தாஸ் அகர்வால் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
எங்களது சமூகமும், அமைப்பும் இப்போது நடைமுறைப் படுத்தப்படு்ம் பொருளாதார சீர்திருத்த கொள்கைகளின் எதிரிகள் அல்ல. ஆனால் பல நூற்றாண்டுகளாக, பாராம்பரியமாக சிறு வியாபாரிகள் ஈடுபட்டுள்ள, சில்லரை வணிகத்தில் சமீபகாலமாக ஏற்பட்டுவரும் போக்குகளையே எதிர்க்கின்றோம்.
பெரிய வர்த்தக, தொழில் நிறுவனங்கள் சில்லரை வணிகத்தில் ஈடுபடுவதை, அவர்களாகவே கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும்.
இவர்கள் உள்கட்டமைப்பு, மின் உற்பத்தி, பெரிய தொழில்களில் கவனம் செலுத்த வேண்டும். சில்லரை வணிகத்தை, சிறு வியாபாரிகளிடமே விட்டுவிட வேண்டும் என்று கூறினார்.
அவர் மேலும் கூறுகையில், சில்லரை வணிகத்தில் அதிகளவில் ஈடுபட்டுள்ளவர்கள் யார் என்று பார்த்தோமானால், பெரும்பாலும் பனியா ( வைசியர் ) சமூகத்தைச் சேர்ந்தவர்களாகத்தான் இருப்பார்கள். எங்கள் கூட்டமைப்பு சில்லரை வணிகத்தில் பெரிய நிறுவனங்கள் ஈடுபடுவதை எதிர்த்து போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளது.
எங்கள் சமூகம் தேச நிர்மானத்தில், வளர்ச்சியில் மற்றும் அரசியல் தலைமைக்கும், ஒட்டு மொத்த சமுதாயத்தின் வளர்ச்சிக்கு பங்காற்றியுள்ளது. இதை அங்கிகரிக்க வேண்டும். இந்த சமுதாயத்தினருக்கு வரி ஏய்ப்பு சோதனை என்ற பெயரில், நெருக்கடி மற்றும் தொல்லைகளை உண்டாக்க கூடாது என்று ராம்தாஸ் அகர்வால் கூறினார்.
ரிலையன்ஸ் நிறுவனம் ஃபிரஷ் என்ற பெயரில், நாடு முழுவதும் காய்கறிகள், பழங்கள் விற்பனை மையங்களை திறந்து வருகிறது.
உத்தரகாண்ட் மாநிலத்தில் டேராடூனில் ரிலையன்ஸ் நிறுவனம், ஃபிரஷ் காய்கறி, பழங்கள் விற்பனை மையத்தை திறந்து வருகிறது.
இதற்கு டேராடூன் வியாபாரிகள் சங்கத்தினரும், லாகு வியாபாரிகள் சங்கத்தினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். டேராடூன் வியாபாரிகள் சங்கத்தை சேர்ந்த சிறு வியாபாரிகள், ரிலையன்ஸ் ஃபிரஷ் கடைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்த கடைகளை பூட்டும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அத்துடன் நேற்று இந்த சங்கத்தைச் சேர்ந்த வியாபாரிகள், முதலமைச்சர் பி.சி. கந்தூரியைச் சந்தித்து, பன்னாட்டு நிறுவனங்கள், உள்நாட்டு பெரிய தொழில், வர்த்தக நிறுவனங்களை சி்ல்லரை விற்பனை கடைகளை திறக்க அனுமதி வழங்க கூடாது என்று மனு கொடுத்தனர்
அவர்கள் குறிப்பாக பால், மளிகை பொருட்கள், காய்கறி, பழங்கள் ஆகியவற்றை விற்பனை செய்யும் கடைகளை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
ஏற்கனவே பெரிய நிறுவனங்கள் திறந்துள்ள சில்லரை விற்பனை கடைகளை மூட வேண்டும். இவைகளுக்கு மின்சாரம், தணணீர் போன்ற வசதிகளை அரசு செய்து கொடுக்க கூடாது என்று மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
லாகு வியாபாரிகள் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் ஒரு நாள் முழு கடை அடைப்பு போராட்டம் நடத்தி, மாநகராட்சி அலுவலகத்தின் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். அப்போது பன்னாட்டு நிறுவனங்கள், உள்நாட்டு பெரிய நிறுவனங்கள் சில்லரை வணிகத்தில் ஈடுபடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டனர். அத்துடன் முதலமைச்சரிடமும், நகர மேயரிடம், தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி மனு கொடுத்தனர்.