Publish Date: Wed, 26 Sep 2007 (13:49 IST)
Updated Date: Wed, 26 Sep 2007 (13:49 IST)
மேற்கு ஆசியா, தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கு கோதுமை மாவு பொருட்கள் ஏற்றுமதி செய்ய வாய்ப்பு இருப்பதாக அரவை ஆலையைச் சேர்ந்தவர்கள் தெரிவித்தனர்.
கோதுமையில் இருந்து தயாரிக்கபப்படும் மாவு, மைதா மாவு போன்றவைகளை ஏற்றுமதி செய்ய மேற்கு ஆசியா, தென் கிழக்கு ஆசியாவைச் சேர்ந்த நாடுகளில் இருந்து வர்த்தக விசாரணைகள் வந்துள்ளன.
இந்த வாய்ப்பு பற்றி நாகா லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கே. எஸ். கமலக்கண்ணன் கூறுகையில், இந்தியாவில் உள்ள அரவை ஆலைகள் கோதுமை, மைதா மாவை சென்னை, தூத்துக்குடி துறைமுகங்களில் இருந்து டன் 400 டாலருக்கு ஏற்றுமதி(கப்பல் சரக்கு கட்டணம் தனி) செய்ய தயாராக உள்ளன.
அரவை ஆலைகளுக்கு, தற்போதிலிருந்து அடுத்த வருடம் மார்ச் மாதம் வரை 1 இலட்சம் டன்னுக்கும் அதிகமாக கோதுமை, மைதா மாவை ஏற்றுமதி செய்யும் வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்தார்.
கோதுமை, மைதா மாவு ஏற்றுமதி செய்வதற்கு இந்தோனேஷியா, மாலத்தீவுகள், வங்காளதேசம், ஏமன், குவைத் ஆகிய நாடுகளில் இருந்து வர்த்தக விசாரணைகள் வந்துள்ளதாக மற்றொரு அரவை ஆலை அதிபர் பிரமோத் குமார் தெரிவித்தார்.