Publish Date: Thu, 20 Sep 2007 (14:09 IST)
Updated Date: Thu, 20 Sep 2007 (14:09 IST)
டி.வி. எஸ். குழுமம் தனியார், நடுத்தர, மற்றும் குடும்ப உறுப்பினர்களால் நடத்தப்படும் நிறுவனங்களில் முதலீடு செய்ய போகிறது!
இதற்காக டி.வி.எஸ். கேப்பிடல் ஃபண்ட்ஸ் லிமிடெட் என்ற நிறுவனத்தை துவக்கியுள்ளது. இது அசட் மேனெஜ்மென்ட் என்று அழைக்கப்படும் சொத்து நிர்வகிப்பு நிறுவனமாக இருக்கும். இந்த நிறுவனம் சென்னையில் இருந்து இயங்கும்.
இந்தியாவின் தனியார், நடுத்தர மற்றும் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த உறுப்பினர்களால் நிர்வகிக்கப்படும் தொழில் மற்றம் வர்த்தக நிறுவனங்கள் அதிகளவில் உள்ளன. இவற்றின் வளர்ச்சிக்கும், விரிவு படுத்தவும் வர்த்தகத்தில் அனைத்து நீக்கு போக்குகளும் தெரிந்த திறமையான நிர்வாகிகளின் ஆலோசனையும், வழிகாட்டுதலும் தேவைப்படுகிறது.
இத்தகைய நிறுவனங்களுக்கு டி.வி.எஸ் கேப்பிடல் பண்ட்ஸ் லிமிடெட், கூட்டாளியாகவும், அவர்களின் மேம்பாட்டிற்கான நிதியை முதலீடு செய்யும் நிறுவனமாக இருக்கும் என்று இதன் நிறுவனர் கோபால் ஸ்ரீனிவாசன் வெளியிட்டுள்ள பத்திரிக்கையில் செய்தியில் கூறியுள்ளார்.
இந்தியாவில் பெரு நகரங்களை தவிர்த்து, மற்ற நகரங்களில் ஆயிரக்கணக்கான கணிசமான முதலீட்டுடன் இயங்கும் நிறுவனங்களும், குடும்ப உறுப்பினர்களால் நிர்வகிப்பபடும் நிறுவனங்கள் இருக்கின்றன. இவைகள் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்ப, தங்களின் தொழில், வர்த்தகத்தை விரிவு படுத்த வேண்டும் என நினைக்கின்றன. இதற்காக இவை சரியான பங்குதாரரையும், உற்பத்தி மற்றும் நிர்வாகத்தை திறம்பட நிர்வகிக்க, நிபுணர்களின் உதவி தேவை என எண்ணுகின்றன.
இதை நிறைவேற்றும் விதத்தில் டி.வி.எஸ் கேப்பிடல் பண்ட்ஸ் லிமிடெட், பல்வேறு உதவிகளை செய்யும். சரியான வழிகளில் வர்த்தகம் செய்வது, உள்கட்டமைப்பு வசதிகள், பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்களுடன் வர்த்தக தொடர்பை ஏற்படுத்துதல் உட்பட பல்வேறு உதவிகளையும், ஆலோசனைகளையும் வழங்கும். இந்தியாவில் மட்டுமல்லாது அமெரிக்கா, ஐரோப்பா, சீனா, தைவான் போன்ற நாடுகளில் உள்ள, இதே போன்ற நிறுவனங்களுக்கும் உதவிகளையும், ஆலோசனைகளையும் வழங்கும்.
இதற்காக அமெரிக்காவில் பூஸ்டனில் உள்ள டியூட்சிசு பேங்க்ஸ் டெக்னாலஜி இன்வெஸ்ட்மென்ட் வங்கியைச் சேர்ந்த சுரேஷ் ராஜூ என்பவரை நியமித்துள்ளது.
இந்த புதிய நிறுவனத்திற்கு தேவைப்படும் முதலீடு நிதி சந்தையில் இருந்து திரட்டப்படும். இது ஏற்கனவே இயங்கிவரும் நிறுவனங்களுக்கு மட்டுமே விரிவுபடுத்துதல், புதிய பிரிவை தொடங்குதல் போன்ற தேவைக்கான நிதியை முதலீடு செய்யும்.
புதிதாக தொழில் தொடங்குவதற்கு ஆரம்ப கட்ட முதலீட்டையோ அல்லது புதிய வகை தொழில்களுக்கான முதலீட்டையோ செய்யாது என தெரிவிக்கப்படுள்ளது.