Publish Date: Wed, 29 Aug 2007 (11:42 IST)
Updated Date: Wed, 29 Aug 2007 (11:42 IST)
கடந்த சில மாதங்களாக டாலர் மதிப்பு உயராத காரணத்தால் கோடைகால ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி பாதிப்படைந்துள்ளது. இதனால் ஏற்றுமதியின் அளவு நாடு முழுவதும் 20 சதவீதம் குறைய வாய்ப்புள்ளது. இதன் காரணமாக ரூ.12 ஆயிரம் கோடி வரை இழப்பு ஏற்படும்.
கடந்த ஆறு மாதங்களாக உலக நாடுகளில் டாலர் விலை படு வீழ்ச்சியடையத் துவங்கியது. கடந்த மார்ச் 23ம் தேதி டாலர் மதிப்பு ரூ. 44ல் இருந்து, மறுநாள் 24ம் தேதி பத்து சதவீதம் வீழ்ச்சியடைந்தது. தொடர்ந்து ஆறு மாதமாகவே டாலர் விலை உயரவில்லை.
நாட்டில் ஏற்றுமதி பாதிக்கப்பட்டதுடன், பல ஆயிரம் கோடி அன்னிய செலாவணி இழப்பு ஏற்பட்டுள்ளது. நாட்டில் ஆயிரத்துக்கும் மேலான ஆயத்த ஆடை ஏற்றுமாதியாளர்கள் உள்ளனர். குறிப்பாக திருப்பூர், ஈரோடு, கரூர் பகுதிகளில் 300க்கும் மேற்பட்ட ஆயத்த ஆடை ஏற்றுமதியாளர்கள் உள்ளனர். ஆயத்த ஆடை ஏற்றுமதியாளர்கள் குளிர், கோடை காலங்களுக்கான ஆடைகளை டாலர் மதிப்பில் பெறுகின்றனர்.
மார்ச் மாதம் குளிர் காலத்துக்கான வணிகத்தை ஏற்றுமதியாளர்கள் வழக்கம் போல் டாலர் மதிப்பில் எடுத்தனர். வணிகம் பெற்ற பின் ரூ.40.50 ஆக குறைந்த டாலர் மதிப்பு நேற்று வரை உயரவில்லை. டாலர் விலை குறைவால் ஆயத்த ஆடை ஏற்றுமதி செய்வதில் போதிய லாபம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
நாட்டில் கடந்த ஆறு மாதமாக குளிர்காலத்துக்கான வணிகங்களை ஏற்றுமதியாளர்கள் செய்து முடித்து அனுப்பி வைத்துவிட்டனர். அடுத்து கோடை காலத்துக்கான ஆர்டர்களை எடுக்க வேண்டிய நிலை உள்ளது.
டாலர் மதிப்பு உயராததால் வழக்கமாக ஏற்றுமதியாளர்கள் எடுக்கும் ஆர்டரில் 20 சதவீதம் வரை குறைய வாய்ப்புள்ளது என ஆயத்த ஆடை ஏற்றுமதியாளர்கள் கருதுகின்றனர். இதன் மூலம் நாடு முழுவதும் ரூ. 12 ஆயிரம் கோடி வரை பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.