Publish Date: Tue, 29 Jul 2008 (16:43 IST)
Updated Date: Tue, 29 Jul 2008 (16:43 IST)
'தகவல் தொடர்பு தொழில்நுட்பக் கொள்கை 2008'-ஐ முதலமைச்சர் கருணாநிதி இன்று தலைமைச் செயலகத்தில் வெளியிட்டார். அதில், ''இந்தியாவில் தகவல் தொழில்நுட்ப உற்பத்தியில் 25 விழுக்காடு பங்கை அடைவதுடன், 2011ஆம் ஆண்டுக்குள் 30 லட்சம் கூடுதல் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதுதான் நோக்கம் என்று கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "மாநில தகவல் தொழில்நுட்பவியல் பணி முனைப்புக் குழுவின் இரண்டாவது கூட்டம் முதலமைச்சர் கருணாநிதி தலைமையில் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முதலமைச்சர் கருணாநிதி ‘தகவல் தொடர்பு தொழில்நுட்பக் கொள்கை 2008’-ஐ வெளியிட்டார்.
பின்னர் தகவல்தொழில்நுட்ப முனைப்புக்குழு உறுப்பினர்களுடன் கலந்துரையாடிய அவர், தகவல் தொழில்நுட்பத் துறையின் வளர்ச்சி தமிழகத்தில் மிகச் சிறப்பாக இருக்கிறது. இதன் பலன்கள் கிராமப்புற மக்களுக்கும் சென்றடையும் வகையில் இத்தகவல் தொழில்நுட்பவியல் கொள்கை வடிவமைக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார்.
தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் சென்னை மட்டுமல்லாது தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக தங்கள் நிறுவனங்களை அமைத்து தமிழக இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பினைப் பெருக்க வேண்டுமென்று அவர் கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து, தகவல் தொழில்நுட்பத்துறையின் செயலர் சந்திரமௌலி, தகவல் தொழில்நுட்பவியல் கொள்கையின் முக்கிய அம்சங்களை விளக்கினார். அவை பின்வருமாறு:
•புதிய தகவல் தொழில்நுட்பக் கொள்கை 2008-ன் தொலைநோக்கம் இந்தியாவில் தகவல் தொழில்நுட்ப உற்பத்தியில் (வன்பொருள், மென்பொருள்) 2011-ஆம் ஆண்டிற்குள் 25 விழுக்காடு பங்கை அடைவதுதான். இந்த இலக்கை அடைவதன் மூலம் தமிழகத்தில் 2011-ஆம் ஆண்டிற்குள் 30 லட்சம் கூடுதல் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதுதான் இந்த கொள்கையின் நோக்கம்.
• இந்த கொள்கையில் தமிழகத்தின் மனித வளத்தை மேம்படுத்த பல புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டிருக்கின்றன. உயர் கல்விக்கான நிறுவனங்களை தமிழகத்தில் அமைத்து ஆராய்ச்சியை ஊக்குவிப்பதும் இக்கொள்கையின் முக்கிய அம்சம் ஆகும். அதைப்போல, தமிழகத்தில் தகவல் தொழில்நுட்பத் துறையில் தொழில் முனைவோருக்கு ஊக்கமளிக்கும் வகையில் சிறப்பம்சங்கள் இக்கொள்கையில் இடம்பெற்றுள்ளன.
• சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில், புதிய, விரிவாக்க பணிகளுக்காக ரூ.250 கோடிக்கு மேல் முதலீடு செய்பவர்களுக்கு கட்டமைப்பு தொகுப்புதவி (structured assistance) அளிக்கவும் இக்கொள்கையில் விரிவாக வழிவகை செய்யப்பட்டுள்ளது.
• சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களில் முதலீடு செய்யும் நிறுவனங்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகையும் வழங்க முதல் முறையாக இக்கொள்கையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் இத்துறை விரிவாக்கமடைந்து, இளைஞர்களுக்கு அதிக அளவில் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் இக்கொள்கை அமைந்துள்ளது.
• இக்கொள்கையில் ஊனமுற்றோர்களுக்கு வேலைவாய்ப்பினை அளிக்கும் நிறுவனங்களுக்கு சிறப்புப் பரிசுகள் வழங்கவும், ஊனமுற்றோர் வேலைவாய்ப்பு பெற சிறப்பு மென்பொருள் தயாரிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இது தவிரவும், பல்வேறு சிறப்பு அம்சங்கள் இத்துறையை மேலும் வளர்ச்சியடையச் செய்யும் நோக்கத்துடன் புதிய தகவல் தொழில்நுட்பக் கொள்கை 2008-ல் கொண்டு வரப்பட்டுள்ளன"என்று கூறப்பட்டுள்ளது