Newsworld It Itnews 0802 22 1080222042_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

3 ஆண்டுகளில் ஒரு லட்சம் பேருக்கு மைக்ரோசாஃப்ட் தொழில்நுட்ப பயிற்சி : என்.ஐ.ஐ.டி.!

Advertiesment
மைக்ரோசாஃப்ட் என்.ஐ.ஐ.டி.
, வெள்ளி, 22 பிப்ரவரி 2008 (15:51 IST)
சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள திறமைவாய்ந்த பணியாளர் தட்டுப்பாட்டை எதிர்க்கொள்ளும் வகையில் அடுத்த 3 ஆண்டுகளில் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தொழில் நுட்பத்தை ஒரு லட்சம் பேருக்கு பயிற்றுவிக்க மைக்ரேசாஃப்ட் , என்.ஐ.ஐ.டி. முடிவசெய்துள்ளன.

சர்வதேச அளவில் தற்போது தகவல் தொழில் நுட்பத்துறை அதிகமான முன்னேற்றத்தை அடைந்து வரும் நிலையில், போதுமான பணியாளர்கள் தேவையான அடிப்படைத் திறமைகள் இன்றி உள்ளனர். இதனால் பல்வேறு நிறுவனங்களின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. கணினி உலகின் முன்னணி நிறுவனமான மைக்ரேசாஃப்ட் நிறுவனத்தின் தொழில் நுட்பத்தை கையாளும் திறன் கொண்ட பணியாளர்கள் தட்டுப்பாடும் அதிகரித்துள்ளது.

பெரும்பாலான நிறுவனங்கள் இந்த தொழில் நுட்பத்தையே பயன்படுத்துவதால் இந்த நிலை உருவாகியுள்ளது. தகவல் தொழில் நுட்பத் துறையில் பணியாற்றும் வல்லுநர்கள், மென்பொருள் உருவாக்குபவர்கள், வர்த்தகர்கள் உள்ளிட்டவர்கள் மைக்ரேசாஃப்ட் தொழில் நுட்பத்தையும், மென்பொருளையும் பயன்படுத்தும் வகையில் என்.ஐ.ஐ.டி. நிறுவனம், மைக்ரேசாஃப்ட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது.

மைக்ரோ சாஃப்ட் நிறுவனத்துடன் ஏற்கெனவே செய்த கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் என்.ஐ.ஐ.டி. நிறுவனத்தின் பணித் தொடர்பான முன்னோடி பயிற்சியான ஜிநிட் (GNIIT) மூலம் தகவல் தொழில் நுட்பத் துறையில் பணியை எதிர்நோக்குபவர்கள் மற்றும் வல்லுநர்கள் மைக்ரோ சாஃப்ட் நிறுவனத்தின் சான்றிதழ் பெற இந்நிறுவனம் உதவும்.

தொழில் நுட்பத்தின் விரைவான வளர்ச்சி மற்றும் வாடிக்கையாளர்களின் தேவை ஆகியன இத்துறை வல்லுநர்களின் பற்றாக்குறை அதிகரிப்புக்கு காரணம் என்றும், இந்நிலையில் திறமையான தகவல் தொழில் நுட்ப பணியாளர்கள் தான் தற்போதைய உடனடி தேவையாக தொழில் துறைக்கு உள்ளது என்று மைக்ரோ சாப்ட் பயிற்சி திட்டத்தின் பொதுமேலாளர் செரிஸ் பியரி தெரிவித்துள்ளார்.

இந்த சூழ்நிலையில் மைக்ரோ சாஃப்ட் நிறுவனம் தனது பாடத்திட்டத்தை வாடிக்கையாளர்களும், பங்குதாரர்களும் தங்களின் முழுத்திறனை பெறும் வகையில் தொழில் நுட்ப அறிவையும், வழிமுறைகளையும் வளர்த்துக் கொள்ளும் விதமாக அமைத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். என்.ஐ.ஐ.டி. நிறுவனத்துடனான தங்கள் ஒப்பந்தம் உலகம் முழுவதும் உள்ள தொழில் துறைக்கு தேவைப்படும் மைக்ரோ சாப்ட் தொழில் நுட்பத்தில் தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க உதவும் என்றும் செரிஸ் பியரி கூறியுள்ளார்.

மைக்ரோ சாப்ட் நிறுவனத்தின் வரவிருக்கும் தொழில் நுட்பம் தொடர்பான பயிற்சி உபகரணங்கள் மற்றும் பாடத்திட்டம் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பையும், தொழில் துறையினருக்கு சர்வதேச அளவில் போட்டியை எதிர்க் கொள்ளவும் உதவும் என்று என்.ஐ.ஐ.டி. நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் விஜய் கே.தடானி கூறியுள்ளார். இந்த பயிற்சி ஒப்பந்தத்தின் மூலம் ஜிநிட் பயிற்சி திட்டம்தான் நாட்டிலேயே தகவல் தொழில் நுட்பத் துறையில் வேலைவாய்ப்புக்கு வகை செய்யும் மைக்ரோ சாப்ட் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ பாடத்திட்டங்களை உள்ளடக்கியது என்ற சிறப்பையும் பெறுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

புதிய மென்பொருளை மேம்படுத்தவும், புள்ளிவிவரத் தொகுப்பு அடித்தளங்களை உருவாக்கும் பயிற்சியில் மாணவர்களுக்கு விஷூவல் ஸ்டூடியோ, டாட்நெட், எஸ்.கியு.எல்.சர்வர் போன்ற புதிய தொழில் நுட்பங்கள் பயிற்றுவிக்கப்படும். இதன் மூலம் மாணவர்களின் திறன் அதிகரிப்பதுடன், தொழில் துறைக்கு தேவையான பணியாளர்களும் எளிதில் கிடைப்பார்கள் என்று கூறியுள்ளார்.

இந்த பாடத் திட்டத்தில் பயிற்சி பெறும் மாணவர்கள் மைக்ரோ சாஃப்ட் நிறுவனத்தின் பிற சான்றிதழ் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க முடியும். விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ள மைக்ரோ சாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் சர்வர் 2008, விஷூவல் ஸ்டுடியோ 2008, எஸ்.கியு.எல்.சர்வர் 2008 மற்றும் முன்னோடித் தொழில் நுட்பமான சில்வர் லைட் ஆகிய பயிற்சிகளுக்கான பயிற்சி முறைகளை என்.ஐ.ஐ.டி. நிறுவனம் உருவாக்கி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் உள்ள 200 என்.ஐ.ஐ.டி. கல்வி மையங்களிலும் இப்பாடத் திட்டம் அறிமுகப்படுத்தப் பட உள்ளது. மேலும் சீனா உள்ளிட்ட 30 நாடுகளில் இந்த பாடத்திட்டத்தை படிப்படியாக அறிமுகப்படுத்தவும் என்.ஐ.ஐ.டி. நிறுவனம் திட்டமிட்டுள்ளது. முதல் கட்டத்தில் மைக்ரோ சாப்ட் நிறுவனத்தின் பாடத் திட்டத்தை 9,000 பேருக்கு என்.ஐ.ஐ.டி. பயிற்சி அளித்துள்ளது. இந்த புதிய பாடத்திட்டத்தின் படி அடுத்த மூன்று ஆண்டுகளில் ஒரு லட்சம் பேருக்கு மைக்ரோ சாப்ட் தொழில் நுட்பத்தை பயிற்றுவிக்க இரு நிறுவனங்களும் இலக்கு நிர்ணயித்துள்ளன.

மென்பொருள் உருவாக்குபவர்கள், தகவல் தொழில் நுட்ப வல்லுநர்கள், அதனைச் சார்ந்த நிறுவனங்களின் வல்லுநர்களுக்கு வேலை கிடைக்கும் வகையில் புதிய தொழில் நுட்பங்களை விரிவான அளவில் பயிற்சி அளிப்பதன் மூலம் தங்களின் உறவை பலப்படுத்திக் கொள்ள முடிவு செய்துள்ளன. தற்போது இரு நிறுவனங்களுக்கு இடையே ஏற்பட்டுள்ள ஒப்பந்தத்தின் மூலம் புதிதாக உருவாகி வரும் சர்வதேச சந்தைகளில் கால்பதிக்கவும், அதேநேரத்தில் திறமைவாய்ந்த பயிற்சியாளர்களையும், வல்லுநர்களையும் உருவாக்க முடியும்.

இந்தியாவில் மைக்ரோ சாப்ட் தொழில் நுட்பப் படிப்புகளை பயிற்றுவிக்கும் என்.ஐ.ஐ.டி. நிறுவனம் மைக்ரோ சாப்ட் நிறுவனத்தின் புதிய தொழில் நுட்பங்களை பயிற்றுவிக்கும் அதே நேரத்தில் மைக்ரோ சாப்ட் தொழில் நுட்பத்தையும், அடிப்படை கணினி பயிற்சியையும் பள்ளிக்கூட அளவில் பயிற்றுவித்து வருகிறது. இத்திட்டம் தமிழகம், ஆந்திரா, அஸ்ஸாம், மேகாலயா, திரிபுரா ஆகிய மாநிலங்களில் நடைமுறையில் உள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil