Publish Date: Fri, 22 Feb 2008 (15:21 IST)
Updated Date: Fri, 22 Feb 2008 (14:01 IST)
''தமிழில் சிறந்த மென்பொருளை உருவாக்குபவர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசாக வழங்கப்படும்'' என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்த பரிசை பெறுவதற்கு, தமிழ் வளர்ச்சியை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்ட மென்பொருளாக இருக்க வேண்டும் என்றும் மென் பொருள் தனி ஒருவராலோ, கூட்டு முயற்சியாலோ அல்லது நிறுவனத்தாலோ உருவாக்கப்பட்டு இருக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த போட்டியில் பங்கேற்பதற்காக ஒவ்வாருவரும் தங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும் என்றும், பதிவுக் கட்டணமாக ரூ.100 பணமாகவோ, வரைவோலையாகவோ தமிழ் வளர்ச்சித்துறை இயக்குனர் என்ற பெயரில் செலுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், விண்ணப்பங்களை "தமிழ் வளர்ச்சித் துறை இயக்குனர், தமிழ் வளர்ச்சி வளாகம் முதல் தளம், ஆல்சு சாலை, எழும்பூர் சென்னை-8" என்ற முகவரியில் பெறலாம் என்றும் பூர்த்தி செய்யயப்பட்ட விண்ணப்பங்கள் மார்ச் 5ம் தேதிக்குள் வந்து சேர வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் சிறந்த தமிழ் மென்பொருளை உருவாக்கியவரை தேர்வு செய்து, கணியன் பூங்குன்றனார் பெயரில் ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படுவதாக தமிழ் வளர்ச்சித்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.