Publish Date: Thu, 07 Feb 2008 (14:28 IST)
Updated Date: Thu, 07 Feb 2008 (14:27 IST)
இந்திய தகவல் தொழில் நுட்ப சந்தையின் மதிப்பு வரும் 2011-ஆம் ஆண்டில் ரூ.97,200 கோடியாக உயரும் என்று கார்ட்னர் வணிக ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் தற்போது சிறிய, நடுத்தர நிறுவனங்கள் அதிக அளவில் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி வருவதாகவும், ஆண்டுக்கு இத்துறையின் வளர்ச்சி விகிதம் 20.3 விழுக்காடாக உள்ளதாகவும் கார்ட்னர் வணிக ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. இதே நிலை தொடரும் பட்சத்தில் வரும் 2011 ஆம் ஆண்டில் இச்சந்தையின் மதிப்பு 24.3 பில்லியன் அமெரிக்க டாலர் அல்லது ரூ. 97,200 கோடியாக இருக்கும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்குத் தேவையான தகவல் தொழில் நுட்பத்தை கிடைக்கச் செய்வதற்கு தலைமை தகவல் அலுவலர்கள் தொடர்ந்து ஒத்துழைப்பையும், உதவியையும் வழங்கும் நிலையில் தகவல் தொழில் நுட்பச் சந்தை வளர்ச்சியடைவதுடன், இந்த வகையான நிறுவனங்களின் வணிக வளர்ச்சியும், திறனும் மேம்படும் என்று கார்ட்னர் தெரிவித்துள்ளார்.
கடந்த 2006 ஆம் ஆண்டு மென்பொருள், வன்பொருளை உள்ளடக்கிய இந்திய தகவல் தொழில் சந்தையின் மதிப்பு 9.6 பில்லியன் (ஒரு பில்லியன் = 100 கோடி) அமெரிக்க டாலராக இருந்தது. நடப்பாண்டில் உலகம் முழுவதும் தகவல் தொழில் நுட்பத்திற்காக வெலவிடப்படும் தொகையின் அளவு 3.3 விழுக்காடு அதிகரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டைக் காட்டிலும் நடப்பு ஆண்டில் தகவல் தொழில் நுட்பத்திற்கான நிதி ஒதுக்கீட்டை சராசரிக்கும் சற்று அதிகமாக 13 விழுக்காடு அளவுக்கு உயர்த்தியுள்ளன. இந்த ஒதுக்கீடு புதிய வர்த்தக தகுதிகளை உருவாக்கி கொள்வதற்கும், இதில் 30 விழுக்காடு நிதி வர்த்தக வளர்ச்சிக்குத் தேவையான தகவல் தொழில் நுட்பத்திற்காகவும், 19 விழுக்காடு தொகை வர்த்தக பரிமாற்றத்திற்கும் இந்த நிறுவனங்கள் ஒதுக்குவதாக இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
அயல் அலுவலக பணி வளர்ச்சி காரணமாக இந்திய தொழில் நுட்பச் சந்தையின் வளர்ச்சி விரிவடைந்து வருவதோடு உள்நாட்டு வளர்ச்சியும் வலுவானதாக உள்ளது. இந்திய நிறுவனங்கள் மனிதர்களுக்கு செலவிடுவதைவிட மென், வன் பொருட்களுக்கு அதிகம் செலவிடுவதாகவும் கார்ட்னர் தெரிவித்துள்ளார். இந்திய நிறுவனங்கள் தங்களின் உள்கட்டமைப்பு வசதியைப் அதிகரித்து கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.