Publish Date: Wed, 19 Sep 2007 (13:05 IST)
Updated Date: Mon, 24 Feb 2014 (19:22 IST)
கணினி ஃபிளாட் மானிட்டர்கள், டிஜிட்டல் கேமிராக்களை தகவல் தொழில்துட்ப தொடர்புடைய சாதனங்களாக மத்திய நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது. இதனால் இவைகளுக்கு இறக்குமதி வரி செலுத்தத் தேவையில்லை!
இதற்கு முன்பு இவைகளுக்கு சுங்கத் துறை 10 விழுக்காடு இறக்குமதி தீர்வை விதித்தனர். இதனை இறக்குமதியாளர்கள் தகவல் தொழில்நுட்ப சாதனமாக கருத்தில் கொள்ள வேண்டும். இறக்குமதி தீர்வை விதிக்கக்கூடாது என வலியுறுத்தினார்கள்.
ஆனால் அரசின் தெளிவான விளக்கம் இல்லாத காரணத்தினால், சுங்கத் துறை அதிகாரிகள் தீர்வை விதித்து வந்தனர். இதனை எதிர்த்து பல இறக்குமதியாளர்கள் நிதி அமைச்சகத்திற்கும், வரி விதிப்பு தீர்ப்பாணையத்திலும் முறையீடு செய்தனர்.
இந்த வழக்கு நிலுவையில் இருப்பதால், இறக்குமதி செய்யப்படும் ஃபிளாட் மானிட்டர், டிஜிட்டல் கேமிராக்களுக்கு செலுத்த வேண்டிய தீர்வயை செலுத்தாமல், அதற்கு இணையாக வங்கி உத்தரவாதம் வழங்குமாறு கூறப்பட்டது. இதனடிப்படையில் வங்கி உத்தரவாதம் அளித்து இறக்குமதி செய்தனர்.
தற்போது மத்திய நிதி அமைச்சகம் ஃபிளாட் மானிட்டர், டிஜிட்டல் கேமிராவை தகவல் தொழில் நுட்பத் துறை சார்ந்த சாதனமாக கருதும் படி விளக்கம் அளித்துள்ளது.
இந்த தீர்வை விலக்க அறிவிப்பால் ஃபிளாட் மானிட்டர்கள், டிஜிட்டல் கேமிராக்களின் விலைகள் குறைய வாய்ப்பிருப்பதாக தெரியவில்லை. ஏனெனில் முன்னணி இறக்குமதியாளர்கள் இறக்குமதி வங்கி உத்திரவாதம் வழங்கி இறக்குமதி செய்துள்ளனர். அத்துடன் இறக்குமதி வரியை விலையில் சேர்க்கவில்லை என கூறுகின்றனர். எனவே விலைகள் குறைவதற்கு வாய்ப்பில்லை.