கடன் வட்டியை 0.20 சதவீதம் உயர்த்தியது எஸ்.பி.ஐ; கடன்களுக்கான மாதத் தவணை உயர வாய்ப்பு
Publish Date: Thu, 07 Nov 2013 (17:50 IST)
Updated Date: Thu, 07 Nov 2013 (17:49 IST)
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கி, கடன் வட்டியை 0.20 சதவீதம் உயர்த்தியுள்ளது. மேலும், இந்த வட்டி உயர்வு இன்று முதல் அமலுக்கு வருவதாக அறிவித்துள்ளது. இதனால், வீடு, வாகனம், நுகர்வோர் கடன்களுக்கான மாதத் தவணையும் உயர வாய்ப்புள்ளது.
ஸ்டேட் பாங்க் தனது அடிப்படை வட்டி விகிதத்தை அல்லது குறைந்தபட்ச வட்டி விகிதத்தை 9.80 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக உயர்த்தியுள்ளது. அதேநேரத்தில், அடிப்படை பிரதான கடன் வட்டி விகிதத்தையும் (பிபிஎல்ஆர்) 0.20 சதவீதம் உயர்த்தியுள்ளது.இதையடுத்து, 14.55 சதவீதத்தில் இருந்து 14.75 சதவீதமாக உயர்ந்துள்ளது. ஸ்டேட் பாங்க் வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளதால், இனி மற்ற அரசு மற்றும் தனியார் வங்கிகளும் வட்டி விகிதத்தை உயர்த்திவிடும். ஏற்கனவே ஹெச்.டி.எப்.சி வங்கி வட்டி விகிதத்தை 0.20 சதவீதம் உயர்த்தி 10 சதவீதமாக அதிகரித்துள்ளது. இந்த மாதம் துவக்கத்தில், வைப்பு நிதி முதலீடுகளில் சில குறிப்பிட்ட கால முதிர்வு தொகைக்கான வட்டியை 0.20 சதவீதம் உயர்த்தியது.
இந்த உயர்வால், ஒரு கோடி ரூபாய்க்கு குறைவான தொகைக்கு 180 முதல் 210 நாட்களுக்கான வட்டி 7 சதவீதம் வழங்கப்படும். இதற்கு முன்னர் வட்டி 6.80 சதவீதமாக இருந்தது. கடந்த வாரம் ரிசர்வ் வங்கி, வர்த்தக வங்கிகள் வாங்கும் குறுகிய கால கடனுக்கான வட்டியை (ரெப்போ ரேட்) 0.25 சதவீதம் உயர்த்தி 7.75 சதவீதமாக நிர்ணயம் செய்தது. இதனால், வங்கிகளுக்கு வட்டி சுமை அதிகரித்தது.
அதே சமயத்தில், மார்ஜினல் ஸ்டேண்டிங் பெசிலிட்டி (எம்எஸ்எப்) என்ற ரிசர்வ் வங்கியிடம் வங்கிகள் வாங்கும் குறுகிய கால சிறப்பு கடனுக்கான வட்டி விகிதத்தை 8.75 சதவீதமாகக் குறைத்தது. இந்த வட்டி விகித மாற்றங்கள் உடனடியாக அமலுக்கு வந்தன. அதேபோல், வங்கிகளிடம் ரிசர்வ் வங்கி வாங்கும் கடனுக்கான வட்டி (ரிவர்ஸ் ரெப்போ) 6.75 சதவீதமாக உயர்த்தப்பட்டது.
இதேபோல், ரிசர்வ் வங்கி, சிஆர்ஆர் விகிதம் 4 சதவீதத்தில் எந்த மாற்றத்தையும் செய்யவில்லை. எஸ்.எல்.ஆர் விகிதம் 23 சதவீதம் என்பதிலும் மாற்றம் செய்யவில்லை. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் வட்டியை 0.10 சதவீதம் உயர்த்தி 9.80 சதவீதமாக நிர்ணயம் செய்தது குறிப்பிடத்தக்கது.