ஈரோடு சந்தையில் தீபாவளி ஜவுளி வியாபாரம் மந்தம்; வியாபாரிகள் கவலை!
Publish Date: Wed, 02 Oct 2013 (18:38 IST)
Updated Date: Wed, 02 Oct 2013 (18:37 IST)
தீபாவளிக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில் ஈரோடு ஜவுளி சந்தையில் ஜவுளி வியாபாரம் படுமந்தமாக இருப்பது வியாபாரிகளை கவலையடைய செய்துள்ளது.ஈரோடு ஜவுளி சந்தை வாரந்தோறும் செவ்வாய்கிழமை கூடும். திங்கள் இரவு துவங்கி செவ்வாய்கிழமை வரையிலும் நீடிக்கும் ஜவுளி சந்தைக்கு தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, ஒடிசா, மத்தியப் பிரதேசம், கேரளா, பஞ்சாப், மேற்கு வங்காளம், சட்டீஸ்கர், பீகார், உத்தரபிரதேசம், டெல்லி என நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஜவுளி வியாபாரிகள் வந்து மொத்த விலைக்கு ஜவுளிகளை வாங்கி செல்கின்றனர்.ஜவுளி சந்தையில் ஆண்டுதோறும் நடைபெறும் தீபாவளி வியாபாரம் முக்கியத்துவம் வாய்ந்தது. வழக்கமாக தீபாவளிக்கு 45 நாள் இருக்கும் போது ஜவுளி வியாபாரம் சூடுபிடிக்க துவங்கும். ஆனால் இந்த ஆண்டு நவம்பர் 2 ஆம் தேதி அதாவது தீபாவளிக்கு சரியாக ஒரு மாதம் மட்டுமே இருக்கும் நிலையில் ஜவுளி வியாபாரம் படுமந்தமாக இருப்பது வியாபாரிகளை கவலையடைய செய்துள்ளது.ஏறத்தாழ ஈரோடு மாநகரில் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மொத்த ஜவுளி நிறுவனங்கள் உள்ளதால் தீபாவளி சமயத்தில் மட்டும் நாள் ஒன்றுக்கு ரூ.10 கோடி முதல் ரூ.15 கோடி வரையிலும் விற்பனையாகும். தீபாவளிக்கு புதுப்புது டிசைன்களில் ரெடிமேடு ஆடைகள் முதல் கட்பீஸ், பிட்துணி ரகங்கள் வரை ஜவுளி சந்தையில் குவிந்துள்ளன.இப்போதே வெளி மாநிலங்களில் இருந்து வியாபாரிகள் வரத்து அதிகரித்து இருக்க வேண்டும். ஆனால் வியாபாரிகள் வருகை மிக, மிக குறைவாக உள்ளதால் மார்க்கெட்டில் உள்ள வியாபாரிகளும், மொத்த ஜவுளி நிறுவனங்களும் ஏமாற்றமடைந்துள்ளனர்.
Webdunia
Publish Date: Wed, 02 Oct 2013 (18:38 IST)
Updated Date: Wed, 02 Oct 2013 (18:37 IST)