400 பேர் பயணம் செய்யும் ரயில் பெட்டிகள் தயாரிக்க ரயில்வே நிர்வாகம் திட்டம்
Publish Date: Tue, 01 Oct 2013 (15:05 IST)
Updated Date: Tue, 01 Oct 2013 (15:04 IST)
முக்கிய நேரங்களில் கூட்ட நெரிசலை சமாளிக்கும் வகையில் சுமார் 400 பயணிகள் வரை பயணம் செய்யக் கூடிய வகையில் பெரிய ரயில்பெட்டிகளை தயாரிக்க இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது. இதுபோன்ற 120 மெகா ரயில்பெட்டிகளை தயாரிக்கும் திட்டத்தை ரயில்வே தயாரித்துள்ளதாக ரயில்வே அமைச்கத்தின் உயர் அதிகாரி தெரிவித்தார்.தற்போது, ஏசி வசதியில்லாத ரயில் பெட்டிகளில் மொத்தம் 250 பயணிகள் பயணம் செய்யலாம். இதில் சுமார் 90 பயணிகள் அமர்ந்து செல்ல இருக்கை வசதிகள் உள்ளன. ஆனால், தினமும் காலை மற்றும் மாலை நேரங்கள் மற்றும் விழா காலங்களில் ரயில்பெட்டிகளில் 250க்கும் மேற்பட்ட பயணிகள் ஏறி பயணம் செய்வதால், ரயில் பெட்டிகளின் தாங்கும் திறன் பாதிக்கப்படுகிறது.அதிக பளு காரணமாக ரயில் பெட்டிகளில் உள்ள ஸ்பிரிங்கள், அச்சுகள், உதிரி பாகங்கள் அடிக்கடி சேதம் அடைகின்றன. பயணிகள் நெரிசல் அதிகரிப்பதால், வலுவான ரயில் பெட்டிகளை தயாரிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது என்றும் அந்த அதிகாரி தெரிவித்தார்.சாதாரண ரயில் பெட்டிகளில் உள்ள இரும்பு சக்கரத்தின் அச்சின் எடை 16 டன். புதிய திட்டத்தின்படி, தயாரிக்கப்படும் வலுவான பெரிய ரயில்பெட்டியில் சக்கர அச்சின் எடை 19.5 டன்னாக இருக்கும். இதன் மூலம் அந்த ரயில்பெட்டியில் 400 பயணிகள் வரை பயணம் செய்யலாம்.பயணிகள் கூட்ட நெரிசல் அதிகம் உள்ள மார்க்கங்களில் பெரிய ரயில்பெட்டிகள் இணைக்கப்பட்ட ரயில்கள் அதிகபட்சமாக 130 கி.மீ. வேகத்தில் இயக்கப்படும். இதற்காக 120 மெகா ரயில் பெட்டிகள் தேவைப்படுகிறது. இவற்றை தயாரிக்க ரயில்வே திட்டமிட்டுள்ளது. இதனால், ரயில்வேயின் வருவாய் அதிகரிக்கும் என்றும் அந்த அதிகாரி கூறினார்.