கிரெடிட் கார்டு இஎம்ஐ முறையில் நகை வாங்க ரிசர்வ் வங்கி தடையால் ஆன்லைன் வர்த்தகம் பாதிப்பு
Publish Date: Mon, 22 Jul 2013 (14:08 IST)
Updated Date: Mon, 22 Jul 2013 (14:08 IST)
கிரெடிட் கார்டுகளில் அளிக்கப்பட்டு வந்த மாத தவணை வசதி (EMI) ரத்து செய்யப்பட்டுள்ளதால் ஆன்லைனில் நகை விற்பனை பெருமளவில் குறைந்துள்ளது. இதுகுறித்து, ஜூவல்லரி தொடர்பான இணையதளம் ஒன்றின் தலைமை நிர்வாகி ஒருவர் கூறியதாவது:ஆன்லைனில் நகைகள் வாங்கி விட்டு அதற்கு கிரெடிட் கார்டு மூலம் பலர் பணம் செலுத்தி வந்தனர். மேலும், மொத்தமாக வாங்கும் நகைக்கு கிரெடிட் கார்டுகளில் இஎம்ஐ முறையில் தொகை செலுத்தும் திட்டத்தை பின்பற்றினர். இதனால் நகைக்கு மொத்தமாக பணம் கட்ட தேவையில்லை என்பதால் பலர் ஆன்லைன் மூலம் நகைகளை வாங்குவதை வாடிக்கையாக கொண்டிருந்தனர்.இதனால், தங்கம் விற்பனை அதிகரித்து அதன் இறக்குமதி உயர்ந்தது. இதையடுத்து தங்கம் இறக்குமதியை குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை ரிசர்வ் வங்கி எடுத்தது. இதன் ஒரு பகுதியாக ஆன்லைனில் நகை வாங்குவோருக்கு கிரெடிட் கார்டில் இஎம்ஐ வசதியை அளிக்கக்கூடாது என்று ரிசர்வ் வங்கி உத்தரவிட்டது. இதனால் பெரும்பாலான வங்கிகள் நகை வாங்குவோருக்கு இஎம்ஐ வசதியை ரத்து செய்தன.இதன் எதிரொலியாக தற்போது ஆன்லைனில் நகை வாங்குவது 50 சதவீதம் வரை குறைந்துள்ளது. பெரிய நிறுவனங்களுக்கு இதனால் பாதிப்பு இல்லை. ஆனால், நகைகளை மட்டுமே விற்பனை செய்து வரும் சிறிய இணையதள நிறுவனங்கள், இந்த நடவடிக்கையால் பாதிக்கப்பட்டுள்ளன என்று அவர் தெரிவித்தார்.