Publish Date: Fri, 06 Feb 2009 (18:11 IST)
Updated Date: Fri, 06 Feb 2009 (18:10 IST)
சீனாவின் போட்டி, விற்பனை குறைவு போன்ற காரணங்களால் பாதிக்கப்பட்டுள்ள 20 லட்சம் நெசவாளர்களுக்கு உதவிடும் வகையில், மத்திய அரசு ரூ.2,600 கோடி கடன் தள்ளுபடி செய்யப் போவதாக மத்திய ஜவுளித் துறை அமைச்சர் சங்கர்சிங் வகேலா தெரிவித்தார்.
புது டெல்லியில் நேற்று நடந்த கருத்தரங்கில் பங்கேற்க வந்த வகேலா, செய்தியாளர்களிடம் பேசும் போது, நெசவாளர்களுக்கு கடன் தள்ளுபடி தொடர்பான எல்லா அலுவல்களையும் முடித்துவிட்டோம். இந்த கடன் தள்ளுபடி குறித்து விரைவில் மத்திய அமைச்சரவை முடிவு எடுக்க உள்ளது.
கடன் தள்ளுபடி மட்டுமல்லாது, விவசாயிகளுக்கு வழங்குவது போல், நெசவாளர்களுக்கும் வருடத்திற்கு 7 விழுக்காட்டில் கடன் வழங்குமாறு நிதி அமைச்சகத்துக்கு பரிந்துரைத்துள்ளோம்.
இதனால் சீனாவில் இருந்து குவியும் கைத்தறி துணிகள், நூல் விலை ஏற்றத்தால் பாதிக்கப்படுள்ள 20 லட்சம் நெசவாளர்களுக்கு உதவியாக இருக்கும்.
விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி திட்டம் அறிவிக்கப்பட்ட போது, இதே போல் இந்தியா முழுவதில் உள்ள நெசவாளர்களும் கடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
தற்போது அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் உட்பட பல நாடுகளின் இறக்குமதி குறைந்துள்ளதால், ஜவுளி துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலைமை வருகின்ற மே மாதத்தில் இருந்து மாறும் என்று வகேலா தெரிவித்தார்.
ஆனால் தற்போதைய நெருக்கடி நிலை, எவ்வாறு மாறும் என்பது பற்றி வகேலா குறிப்பிட்டு எதுவும் கூறவில்லை.
Webdunia
Publish Date: Fri, 06 Feb 2009 (18:11 IST)
Updated Date: Fri, 06 Feb 2009 (18:10 IST)