Publish Date: Tue, 03 Feb 2009 (18:24 IST)
Updated Date: Tue, 03 Feb 2009 (18:03 IST)
சத்யம் கம்ப்யூட்டர் சேர்மன் ராமலிங்க ராஜுவிடம் செபி அதிகாரிகள் விசாரணை நடத்துவதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
சத்யம் கம்யூட்டர்ஸ் நிறுவனத்தில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக அதன் சேர்மன் ராமலிங்க ராஜு, மேலாண்மை இயக்குநர் ராம ராஜு, தலைமை நிதி அதிகாரி சீனிவாஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இவர்களிடம் நடந்த முறைகேடுகள் பற்றி, விசாரணை நடத்துவதற்கு அனுமதி கோரி, பங்குச் சந்தையை கண்காணிக்கும் செபி தாக்கல் செய்த மனுவை ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதை தொடர்நது, செபி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் நேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது. இதன் மீதான விசாரணை இன்றுஒத்திவைக்கப்பட்டது.
இன்று இந்த மனுவை தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையிலான அமர்வு மன்றம் விசாரித்தது. நீதிபதிகள் ராமலிங்க ராஜுவை விசாரிக்க செபி அதிகாரிகளுக்கு அனுமதி வழங்க சிறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர். இதையடுத்து, செபி விசாரணை அதிகாரி சுனில் குமார், ராஜுவிடம் நாளை விசாரணை நடத்துவார் என்று தெரிவிக்கப்பட்டது.