Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மேட்டூர் அணை மூடப்பட்டது

மேட்டூர் அணை மூடப்பட்டது
சேல‌ம் , வியாழன், 29 ஜனவரி 2009 (10:53 IST)
மேட்டூர் அணை நேற்று மாலை மூடப்பட்டது. இதனால், தினமும் 400 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணை மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு, திருச்சி, தஞ்சை, திருவாரூர், கரூர் உட்பட 11 டெல்டா மாவட்டங்களில் 16.05 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது.

ஆண்டுதோறும் ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படும். அணையின் நீர் இருப்பு, பருவ மழை பொறுத்து அணை திறப்பில் மாறுதல் செய்யப்படும்.

ஜூன் 12ஆம் தேதி முதல் ஜனவரி 28ஆம் தேதி வரை குருவை, சம்பா, தாளடி பயிர்களுக்கு 330 டி.எம்.சி. தண்ணீர் பாசனத்திற்கு தேவைப்படும். டெல்டா மாவட்டங்களில் பெய்யும் மழையை பொறுத்து தண்ணீர் தேவை குறையும். கடந்த ஜூன் மாதம் 12ஆம் தேதி மேட்டூர் அணை நீர்மட்டம் 103.31 அடியாக இருந்தபோது, பாசனத்திற்காக திறந்து விடப்பட்டது.

நேற்று மாலை வரை காவிரி டெல்டா பாசனத்திற்காக 220.10 டி.எம்.சி. தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. கர்நாடகாவில் இருந்து 192.30 டி.எம்.சி. தண்ணீர் வந்துள்ளது. இதில், அணை நீர்பிடிப்பு பகுதிகளில் பெறப்பட்ட தண்ணீரும் அடங்கும்.

இந்நிலையில், குறிப்பிட்ட தினமான நேற்று மாலை 6 மணியளவில் மேட்டூர் அணை மூடப்பட்டது. அப்போது, அணை நீர் மட்டம் 62.33 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 293 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையின் நீர் இருப்பு 26.45 டி.எம்.சி. ஆக இருந்தது.

மேட்டூர் அணை மூடப்படுவதால் நீர் மின் நிலையங்களில் மின் உற்பத்தி நிறுத்தப்படும். அணை மின்நிலையத்தில் 50 மெகாவாட் மின்சாரமும், சுரங்கம் மின் நிலையத்தில் 200 மெகாவாட் மின்சாரமும், 5 கதவணைகள் மூலம் 150 மெகாவாட் மின் உற்பத்தியும் நிறுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Share this Story:

Follow Webdunia tamil