Publish Date: Tue, 27 Jan 2009 (13:02 IST)
Updated Date: Tue, 27 Jan 2009 (13:01 IST)
ரிசர்வ் வங்கி இன்று 2008-09 நிதி ஆண்டிற்கான மூன்றாவது காலாண்டு ஆய்வறிக்கையை வெளியிட்டது.
இதில் வங்கிகளின் வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யப்படவில்லை. அதே நேரத்தில் எஸ்.எல்.ஆர் [Statutory liquidity ratio (SLR)] எனப்படும் வங்கிகளின் குறைந்தபட்ச ரொக்க விகிதத்தை 1.5 விழுக்காடு வரை குறைத்துள்ளது. இதனால் வங்கிகள் அதிக அளவு பரஸ்பர நிதி, வங்கிசாரா நிதி நிறுவனங்கள், வீட்டு கடன் வழங்கும் நிறுவனங்களுக்கு கடன் கொடுக்க முடியும்.
ரிசர்வ் வங்கி சென்ற நவம்பர் மாதத்தில், இந்த நிறுவனங்களுக்கு வங்கிகள் அதிக அளவு கடன் கொடுக்கும் வகையில் பணப்புழக்கத்தை அதிகரிக்கும் வகையில் 1 விழுக்காடு சிறப்பு சலுகை வழங்கியது.
இன்று மும்பையில் மூன்றாவது காலாண்டு பொருளாதார ஆய்வறிக்கையை வெளியிட்டு ரிசர்வ் வங்கி கவர்னர் டி.சுப்பாராவ் பேசுகையில், இந்த நிதி ஆண்டின் எஞ்சியுள்ள மூன்று மாதத்தில் பணப்புழக்கத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையிலும், வளர்ச்சிக்கு தேவையான கடன் கிடைக்கும் வகையிலும் பொருளாதார கொள்கை அறிவிக்கப்பட்டுள்ளது.
உலக அளவிலும், உள்நாட்டிலும் வளர்ச்சி தேக்க நிலை, பொருளாதார நெருக்கடி போன்றவைகளால் பாதிப்பு ஏற்படாத வகையில், ரிசர்வ் வங்கி துரிதமாக செயல்பட்டு உரிய காலத்தில் தேவையான நடவடிக்கைகளை எடுத்தது.
சர்வதேச அளவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி, வளர்ச்சி பாதிப்பு, பல்வேறு பண்டங்களின் விலை சரிவு ஆகியவைகளால், இந்திய பொருளாதாரமும் பல்வேறு வகையில் பாதிக்கப்பட்டது.
முதலில் நிதி துறையில் ஏற்பட்ட நெருக்கடி, பிறகு ஒட்டு மொத்த பொருளாதார வளர்ச்சியையே பாதித்தது. உலக அளவிலான நிதி சந்தை மீது ஏற்பட்ட அவநம்பிக்கையால், சங்கிலி கண்ணிபோல் பல்வேறு துறைகளையும் பாதித்தது. சொத்து மதிப்பு சரிந்தது, வருவாய் குறைந்தது, பொருட்களின் தேவையும் சரிந்தது. இவைகளால் வேலையில்லா திண்டாட்டமும் அதிகரித்தது.
தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி, இந்த வருட இறுதி வரை மாற்றம் அடைவதற்கு வாய்ப்பு இல்லை. சில பொருளாதார நிபுணர்கள் இந்த நெருக்கடி இந்த வருடத்திற்குள் முடியாது என்று கருதுகின்றனர் என்று தெரிவித்தார்.
Webdunia
Publish Date: Tue, 27 Jan 2009 (13:02 IST)
Updated Date: Tue, 27 Jan 2009 (13:01 IST)