Publish Date: Fri, 16 Jan 2009 (16:49 IST)
Updated Date: Sat, 22 Feb 2014 (22:34 IST)
சத்யம் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் நடந்த முறைகேடு தொடர்பாக, இதன் முன்னாள் சேர்மன் ராமலிங்க ராஜு, அவரின் தம்பியும் மேலாண்மை இயக்குநருமான ராம ராஜு, தலைமை நிதி அதிகாரி வி.சீனிவாஸ் ஆகியோரிடம் விசாரணை நடத்த அனுமதி கோரி, செபி தாக்கல் செய்த மனு மீதான விசாரணை முடிவடைந்தது. இந்த வழக்கு வரும் 19 ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டது.
பங்குச் சந்தையை கட்டுப்படுத்தும் செபி, சத்யம் நிறுவனத்தின் கணக்குகளில் நடந்த ரூ.7 ஆயிரம் கோடி முறைகேடுகள் குறித்து விசாரணைக்கு சென்ற 9 ஆம் தேதி வருமாறு, ராமலிங்க ராஜுவிற்கு தாக்கீது அனுப்பியது. இது தொடர்பான ஆவணங்களையும் கொண்டுவருவாறு கூறியிருந்தது.
ஆனால் ராமலிங்க ராஜு செபியின் அதிகாரிகள் முன்பு ஆஜராகவில்லை. அவரின் சார்பில் அவரது வழக்கறிஞர் பரத் குமார் ஆஜராகி, ராமலிங்க ராஜுவிற்கு உடல் நலம் சரியில்லை என்று தெரிவித்தார்.
இந்நிலையில் ராமலிங்க ராஜுவையும், மற்ற இருவரையும் ஆந்திர மாநில சி.பி-சி.ஐ.டி பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர். இவர் நீதி மன்ற காவலில் சிறைச்சாலையில் உள்ளார்.
எனவே ராமலிங்க ராஜுவையும், மற்ற இருவரையும் விசாரிக்க அனுமதி கோரி, ஹைதராபாத் பெருநகர ஆறவது மாஜிஸ்திரேட் நீதி மன்றத்தில், ராமலிங்க ராஜுவிடம் விசாரணை செய்ய அனுமதி கோரி, செபி மனு தாக்கல் செய்திருந்தது.
இதற்கு முன்பு விசாரணையில், ராமலிங்க ராஜுவின் வழக்கறிஞர் பதில் மனு தாக்கல் செய்ய ஒரு நாள் அவகாசம் கேட்டு இருந்தார். இதனால் வழக்கு விசாரணை இன்று ஒத்திவைக்கப்பட்டது.
இதன் மீதான விசாரணை இன்று நீதிபதி ராமகிருஷ்ணா முன்பு நடந்தது. இருண்டு தரப்பு விவாதங்களையும் கேட்ட நீதிபதி, அடுத்த கட்ட விசாரணையை வரும் 19 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.