Publish Date: Thu, 08 Jan 2009 (12:06 IST)
Updated Date: Thu, 08 Jan 2009 (12:03 IST)
ஹைதராபாத்: சத்யம் கம்ப்யூட்டர் நிறுவனத்தின் கணக்குகளில் ரூ.7,136 கோடி முறைகேடாக காண்பிக்கப்பட்டுள்ளது என்று ராமலிங்க ராஜு நேற்று ஒத்துக் கொண்டார்.
இந்தியாவின் மென்பொருள் வடிவமைப்பு நிறுவனங்களில் நான்காவது இடத்தில் இருக்கும் சத்யம் கம்யூட்டரின் நிறுவனரும் சேர்மனுமான ராமலிங்க ராஜூ நேற்று சேர்மன் பதவியை ராஜினமா செய்தார்.
இதன் இயக்குநர்கள் குழு கூட்டம் வருகின்ற 10 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், நேற்று ராமலிங்க ராஜூவும், அவரது தம்பியும் மேலாண்மை இயக்குநருமான ராம ராஜூவும் பதவியை ராஜினமா செய்தார்.
தனது பதவி விலகல் குறித்து ராமலிங்க ராஜு இயக்குநர்களுக்கும், பங்குச் சந்தைகள், பங்குச் சந்தையை கண்காணிக்கும் செபிக்கு எழுதிய கடிதத்தில், சத்யம் கம்ப்யூட்டர் நிறுவனத்தின் கணக்குகளில் செயற்கையாக வருவாய், இலாபத்தை காண்பித்துள்ளதாக கூறியுள்ளார்.
இந்த கணக்குகளில் வங்கிகளிலோ அல்லது ரொக்கமாகவோ இல்லாமல், ரூ.5,040 கோடி இருப்பில் இருப்பதாக காண்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ரூ.1,230 கோடி வரவு வர வேண்டிய பாக்கி, கடன் கொடுக்க வேண்டியது ரூ.490 கோடி என்று காண்பிக்கப்பட்டுள்ளது. ( உண்மையான கடன் ரூ.2,651 கோடி ).
கடந்த காலங்களில் உண்மையான இலாபத்தை விட பல மடங்கு (இலாப-நஷ்ட கணக்கு) இலாபம் அடைந்திருப்பாதக காண்பிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதிக இலாபம் பெற்று இருப்பதாக செயற்கையாக கணக்கில் காண்பிக்க நிறுவனம் பல மடங்கு வளர்ச்சி அடைந்திருப்பதாக பொய்யான தகவல் கூறப்பட்டது என்று கூறியுள்ளார்.