Publish Date: Thu, 08 Jan 2009 (11:36 IST)
Updated Date: Thu, 08 Jan 2009 (11:36 IST)
3வது நாளாக நடைபெற்று வரும் லாரிகள் வேலை நிறுத்தத்தால் கோவை, சேலம் மாவட்டங்களில் ரூ.230 கோடி மதிப்புள்ள ஜவுளிகள் தேக்கமடைந்துள்ளன.
நாடு முழுவதும் லாரி உரிமையாளர்கள் பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி கடந்த ஞாயிற்றுக்கிழமையில் இருந்து வேலைநிறுத்தம் செய்து வருகின்றனர். இதனால் கோவை, சேலம் மாவட்டங்களில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் 2 லட்சம் விசைத்தறிகள் உள்ளன. தினமும் 2 கோடி மீட்டர் துணிகள் உற்பத்தியாகிறது. உற்பத்தியாகும் துணிகள், பிறஇடங்களுக்கு லாரிகள் மூலம் அனுப்பப்படுகிறது. லாரிகள் வேலைநிறுத்தம் நேற்று 3வது நாளாக நீடித்ததால், ஜவுளிகளை அனுப்ப முடியவில்லை.
ரூ.180 கோடி மதிப்பிலான 6 கோடி மீட்டர் ஜவுளிகள் தேங்கியுள்ளது. இதே நிலை நீடித்தால் உற்பத்தியாகும் ஜவுளியை இருப்பு வைக்க இடமில்லாத நிலை ஏற்படும் என்பதால், உற்பத்தியை நிறுத்த உற்பத்தியாளர்கள் முடிவு செய்துள்ளனர். இதன் காரணமாக, விசைத்தறி தொழிலை நம்பியுள்ள ஒரு லட்சம் பேர் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இயங்குகின்றன. இங்கு தயாரான ரூ.50 கோடி மதிப்புள்ள ஜவுளிகளை லாரிகள் வேலை நிறுத்தத்தால் வெளியிடங்களுக்கு அனுப்ப முடியவில்லை.
தேனி மாவட்டத்தில் திராட்சை, மக்காச்சோளம், வாழை மற்றும் காய்கறிகள், நவதானியங்கள், தேயிலை, பருத்தி போன்றவற்றை அயல்மாநிலங்களுக்கு அனுப்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 200 அரிசி ஆலைகளிலிருந்து அயல்மாநிலங்களுக்கு அனுப்பப்படும் அரிசி மூட்டைகளும் தேக்கமடைந்துள்ளன.
விருதுநகர் மாவட்டத்தில் சாத்தூர், சிவகாசி பகுதிகளிலிருந்து தினமும் ரூ.50 லட்சத்திற்கும் அதிகமான தீப்பெட்டிகள் வெளியிடங்களுக்கு அனுப்ப முடியவில்லை.
திருப்பூரில் தினமும் ரூ. 70 கோடி பனியன்கள் வீதம் இதுவரை ரூ.210 கோடி பனியன்கள் தேக்கமடைந்துள்ளன. ரூ. 90 கோடியில் இதர வர்த்தகமும் பாதிக்கப்பட்டுள்ளது.
Webdunia
Publish Date: Thu, 08 Jan 2009 (11:36 IST)
Updated Date: Thu, 08 Jan 2009 (11:36 IST)