அமெரிக்காவைச் சேர்ந்த ஜெனரல் மோட்டார் நிறுவனம், இந்தியாவில் கார்களை உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகிறது. இதன் தொழிற்சாலை வருடாந்திர பராமரிப்பு பணிகளுக்காக இரண்டு வாரம் மூடப்பட்டது. தற்போது தொழிற்சாலை திறக்கப்பட்டு பணிகள் தொடங்கியுள்ளன.
இது குறித்து ஜெனரல் மோட்டார் இந்தியா நிறுவனத்தின் துணைத் தலைவர் பி.பாலேந்திரன் விடுத்துள்ள அறிக்கையில், எங்கள் நிறுனத்தின் இரண்டு வாகன உற்பத்தி தொழிற்சாலைகளும் பராமரிப்பு பணிகளுக்காக இரண்டு வாரம் மூடப்பட்டு இருந்தன. தற்போது இதில் உற்பத்தி துவங்கியுள்ளது.
தற்போது வாகன விற்பனை அதிக அளவு குறைந்துள்ளது. இதனால் எங்களின் விற்பனை இலக்கை அடைய முடியாது. இருப்பினும் 9.5 விழுக்காடு வளர்ச்சி அடைந்துள்ளது. இந்த நெருக்கடியான நேரத்திலும் வளர்ச்சி அடைந்ததற்கு காரணம், எங்கள் தயாரிப்பான செவர்லட் ரகத்தில் ஸ்பார்க், யூ-விஏ, கேப்டிவா போன்ற மாடல்களுக்கு அதிக வரவேற்பு உள்ளதே.
மத்திய அரசு எடுத்துள்ள பல நடவடிக்கைகளால், அடுத்து வரும் மாதங்களில் வாகன விற்பனை அதிகரிக்கும். இந்த வருடத்தில் மூன்று புதிய ரக கார்களை அறிமுகப்படுத்த உள்ளோம் என்று கூறியுள்ளார்.
ஜெனரல் மோட்டார் நிறுவனம் 2008 ஆம் ஆண்டில் 65,702 கார்களை விற்பனை செய்துள்ளது. இது முந்தைய வருடத்துடன் ஒப்பிடுகையில் 9.5 விழுக்காடு வளர்ச்சி. (2007 இல் 60,032 கார்கள் விற்பனை). இது டிசம்பர் மாதத்தில் மொத்தம் 4,041 கார்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது. இதில் 509 செவர்லட் டாவிரா (Chevrolet Tavera), 867 செவர்லைட் ஆவ்யா (Chevrolet Aveo), 248 செவர்லட் ஆப்ட்ரா (Chevrolet Optra), 2382 செவர்லட் ஸாபார்க் (Chevrolet Spark), 35 செவர்லட் கேப்டிவா (Chevrolet Captiva) கார்களை விற்பனை செய்துள்ளது.