திருவாரூர் : நெல் தவிர மற்ற பயிர்களுக்கு ஜனவரி 15 ஆம் தேதி வரை காப்பீடு செய்யலாம் என தேசிய வேளாண் காப்பீடு நிறுவனம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் தேசிய வேளாண் காப்பீடுத் திட்டத்தில் ராபி -2008 பயிர்களுக்கு கடன் பெறாத விவசாயிகள், காப்பீடுக்கான் பிரீமியத் தொகையை, அவர்கள் சாகுபடி செய்யும் பயிருக்கு ஏற்றவாறு, சேமிப்புக் கணக்கு வைத்திருக்கும் வர்த்தக வங்கி, அல்லது கூட்டுறவு வங்கி, அல்லது கிராமிய வங்கியில் சேர்ந்து பயிர் காப்பீடு பெறலாம்.
இந்த திட்டத்தின் கீழ் கம்பு, சோளம், ராகி, மக்காச்சோளம், நிலக்கடலை, எள், கொள்ளு, உளுந்து, பச்சைப்பயறு, நெல் தரிசில் பருத்தி, வாழை, மரவள்ளி, வெங்காயம் ஆகிய பயிர்களுக்கு செலுத்த வேண்டிய காப்பீடு பிரிமியத்தில் 50 விழுக்காடு மானியத்துடன் காப்பீடு செய்யலாம். இந்தப் பயிர்களுக்கு காப்பீடு செய்ய ஜனவரி 15 கடைசி நாளாகும்.
வாழைக்கு கூடுதலாக பிரீமியம் உள்ளதால் விவசாயிகள் ரூ.1 லட்சம் மதிப்புக்கு 10.75 விழுக்காடு பிரீமியம் செலுத்தலாம். அதில் 50 விழுக்காடு மானியம் வழங்கப்படும்.
இந்த காப்பீடு விண்ணப்பங்கள் வேளாண் அலுவலகத்தில் கிடைக்கும். பூர்த்தி செய்யப்பட்ட படிவத்துடன், கணினி சிட்டா, அடங்கல் அல்லது கிராம நிர்வாக அலுவலர் சான்றிதழ் கண்டிப்பாக இணைத்து, பிரீமியத்தை சேமிப்பு கணக்கு வைத்துள்ள வங்கியில் செலுத்தித் திட்டத்தில் சேருமாறு நிர்வாக அலுவலர் க. சூரியநாராயணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளார்.